;
Athirady Tamil News

இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான் பிரதமர்

0

இந்தியாவின் தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் உரிமை தங்களுக்கு உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் நேற்று (மே 7) கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் ராணுவம் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியாவின் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தேசிய பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று (மே 7) நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குப் பிறகு அந்நாட்டுப் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் பேசியதாவது, ”ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும். இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுப்பதற்காக படைகளைத் தயார்நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டிற்கான மரியாதையை அவர்கள் மீட்டெடுப்பார்கள்” எனக் கூறினார்.

மேலும், ”பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நள்ளிரவில் இந்தியா நடத்திய தாக்குதல், கோழைத்தனமானது; சட்டவிரோத போர் நடவடிக்கை. இந்தியாவால் திணிக்கப்பட்டுள்ள போருக்கு பதிலடி கொடுக்கும் உரிமை பாகிஸ்தானுக்கு உள்ளது. தவறான நோக்கம் கொண்ட எதிரிகள் வெற்றிபெற ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்” எனக் குறிப்பிட்டார்.

ஆபரேஷன் சிந்தூர்

ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பஹல்காம் சுற்றுலாத் தளத்தின் பைசாரன் பள்ளத்தாக்கில் ஏப். 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 13 நாள்கள் கழித்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் எல்லை மற்றும் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை (மே 6) நள்ளிரவு தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் 4 இலக்குகள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 3 இலக்குகள் மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 தளங்கள் என 9 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.

இதில், ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் தலைவரான மசூத் அசாரின் சகோதரி உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.