எல்லையில் படை குறைப்பு: இந்தியா – பாக். ராணுவம் இடையே உடன்பாடு!

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கைக்குப்பின் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீரிலும், பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதிகளிலும் சண்டை நீடித்தது. இதனால் கடந்த 4 நாள்களாக ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப்பில் அசாதாரண சூழல் நிலவியது. இந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளதாக கடந்த சனிக்கிழமை(மே 10) மாலை 5 மணிக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்திய ராணுவ உயரதிகாரிகளுடன் பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் முதல்கட்டமாக நேற்று (மே 12) மாலை பேச்சுவார்த்தை நடத்தினர். ஹாட்-லைன் தொலைபேசி வழியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை நேற்று மாலை 6 மணியளவில் முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில், எல்லைப் பகுதிகளில் படை குறைப்பு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள இருதரப்பும் சம்மதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பிலிருந்தும் ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படாது என்பதையும் எவ்வித அச்சுறுத்தல் செயல்களையும் மேற்கொள்ளக் கூடாது என்பதை உறுதியுடன் கடைப்பிடிப்பதையும் இந்த பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்பட்டது.