;
Athirady Tamil News

வடகிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை: நிலச்சரிவுக்கு 26 பேர் பலி!

0

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.

ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 26 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மிசோரம், அசாம், மணிப்பூர், திரிபுரா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிலைமை மோசமாக உள்ளது. அங்கு சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு, வீடுகள் தரைமட்டமாகின. இதனால், பலரும் தங்களது வீடுகளை இழந்து தெருவில் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையம், வடகிழக்கு மாநிலங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என்றும், வரும் நாள்களில் மேலும் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடரும் மழையால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் மண்ணில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அசாமில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 17 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி 78,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காம்ரூப் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர். மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குவஹாத்தியின் சில பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மீட்புக் குழுவினர் சிக்கித் தவிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மிசோரமில் 4 பேர், மேகாலயாவில் 6 பேர், அருச்சாலப் பிரதேசத்தில் 9 பேர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையம், ஜூன் 1 முதல் 5 வரை பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், ஜூன் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்றும் கணித்துள்ளதால், நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்குக் கொண்டுச் செல்லும் பணியில் மீட்புப் பணியினர் ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.