நேரலையில் பேசிய செய்தியாளர் வெள்ளத்தில் மாயம்? வீடியோ வைரல்!
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் நின்றுக்கொண்டு பேசிய செய்தியாளர் ஒருவர், அந்த வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாகிஸ்தான் நாட்டில், கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்து வருகின்றது. இதனால், அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ராவல்பிண்டி மாவட்டத்திலுள்ள சாஹன் அணையில், கரைப்புரண்டு ஓடும் வெள்ள நீரினுள் நின்றுக்கொண்டு, வெள்ளத்தின் நிலவரம் குறித்து நேரலையில் பேசிக்கொண்டிந்த செய்தியாளர் ஒருவர், அந்த வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த முழு சம்பவமும், விடியோவில் பதிவு செய்யப்பட்ட நிலையில், மிகவும் ஆபத்தான கழுத்து உயரமுள்ள வெள்ள நீரில் அவர் நின்றபடி மைக்கில் பேசிக்கொண்டிருப்பதும், பின்னர், வெள்ளத்தில் அவர் அடித்துச் செல்லப்படுவதும் பதிவாகியுள்ளன.
A Pakistani reporter is swept away by strong currents during a live broadcast while covering the floods in neck-deep water.#Pakistan #Floods pic.twitter.com/0raCbYaoer
— Al Arabiya English (@AlArabiya_Eng) July 17, 2025
இந்த விடியோ தற்போது, இணையத்தில் வைரலாகி வரும் சூழலில், பலரும் அந்தப் பெயர் அறியாத செய்தியாளரை பாராட்டி வருகின்றனர். ஆனால், சிலர் இது செய்யறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட போலியான விடியோ என்று தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த விடியோ காட்சிகளில் உள்ள செய்தியாளரின் விவரங்கள் குறித்து, இதுவரை தெளிவான செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும், அந்நபர் உள்ளூரைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் என்று இணையத்தில் சிலர் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.
கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல், பாகிஸ்தான் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது. இதனால், ஏற்பட்ட பாதிப்புகளினால் தற்போது வரையில், 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.