;
Athirady Tamil News

பாகிஸ்தானுக்கு புதிய ஆபத்து? பஞ்சாபில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகள்!

0

பாகிஸ்தானில் ஓயாமல் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பெய்த கனமழையால், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு ஏராளமானோர் பலியாகியுள்ளனர். இதில், அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணமான பஞ்சாபில் தற்போது டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

பஞ்சாபின் ராவல்பிண்டி மாவட்டத்தின் மக்கள் குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதிகளில், வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால், அம்மாவட்டத்தில் மட்டும் தற்போது வரை 17 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், 16 பேர் சிகிச்சை முடிந்து வீடுத் திரும்பிய நிலையில், ஒருவர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, திடீரென அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகளை உடனடியாகக் கட்டுப்படுத்த, ராவல்பிண்டி மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஜூன் மாதம் முதல் பெய்து வரும் கனமழையால், பாகிஸ்தானின் பஞ்சாப், கைபர் பக்துன்குவா, சிந்து ஆகிய மாகாணங்களிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், தற்போது வரை அந்நாட்டில் 266 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.