;
Athirady Tamil News

கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம்: வலிகாமம் தெற்கு பிரதேச சபை எதிர்ப்பு!

0

யாழ். கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் இன்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

குறித்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதற்கும் தயாராக இருப்பதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் திராகராஜா பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று(30) சபையின் தவிசாளர் திராகராஜா பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தவிசாளர் அவர் மேலும் தெரிவிக்கையால், யாழ்.வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கந்தரோடை பகுதியில் அமைந்திருக்கும் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான இடத்தில் பௌத்த மக்கள் தொடர்ச்சியாக பார்வையிடுவதற்காக வந்து கொண்டிருக்கிறார்கள்.

குறித்த பகுதியில் பிக்கு ஒருவர் காணி ஒன்றை கொள்வனவு செய்து பௌத்த மத்திய நிலையம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக பொதுமக்களிடமிருந்து நிதி வசூலிப்பு செய்கின்ற ஒரு பெயர் பலகையும் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது.

சட்டவிரோத கட்டடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் முதற்கட்டமாக அவருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டிருக்கின்றது, குறித்த பகுதியில் கட்டிட நிர்மாணத்தை நிறுத்துமாறு என்னால் பிரசுரம் ஒட்ப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக அங்கு வரும் மக்களுக்கு தமிழ் பௌத்தம் இருந்த வரலாற்றை அத்தோடு இந்துமத, சைவமத வரலாற்றை மறைக்கும் முகமாக அங்கே வருகின்ற கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது.

இது ஒரு தவறான செயல் இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அந்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான பகுதிகளில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று அகழ்வாராய்ச்சியை செய்து வருகின்றது. அருகில் இருக்கும் காணிகளில் இந்த அகழ்வாராட்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அண்மையில் நான் அறிந்தேதேன் ஆய்வுகளின் போது மூன்று அடி உயரமான ஒரு கிருஷ்ணர் சிலை அங்கே கிடைக்கப் பெற்றிருக்கின்றது. அதனை மூடி மறைத்து குறித்த பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ளாமல் வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த பௌத்த மயமாக்கல் என்பது எங்களுடைய பிரதேசத்தில் அதாவது தயிட்டியை போல், மீண்டும் கந்தரோடையிலும் தொல்லியல் திணைக்களத்தின் அனுசரணையுடன் தற்போதைய அரசாங்கமும் பௌத்த மாயமாக்கலை எமது பிரதேசத்தில் அமூல்ப்படுத்த நினைக்கின்றது.

இந்த நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.