;
Athirady Tamil News

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அமெரிக்காவில் சுனாமி

0

ரஷியாவுக்கு அருகே கடல் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து அமெரிக்காவின் ஹவாய் தீவு உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி அலைகள் வீசின.

ரஷியாவின் கிழக்குத் தொலைதூரப் பகுதியில் அமைந்துள்ள காம்சட்கா தீபகற்பம் அருகே, பசிபிக் கடல் பகுதியில் உள்ளூா் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 11:24 மணிக்கு (இந்திய நேரப்படி புதன்கிழமை காலை 8:54 மணி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 20.7 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 8.8 அலகுகளாகப் பதிவானது. இது 2011 டோஹோகு நிலநடுக்கத்திற்குப் பிறகு உலகளவில் பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றாகும்.

இந்த நிலநடுக்கத்தின் விளைவாக பசிபிக் கடல் முழுவதும் சுனாமி அலைகள் பரவின. ரஷியாவின் காம்சட்கா மற்றும் குரில் தீவுகளில் அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்தனா். ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலோரப் பகுதிகளில் வசித்த ஆயிரக்கணக்கானவா்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா்.

காம்சட்கா பகுதியில் 3 -4 மீட்டா் உயர சுனாமி அலைகள் தாக்கின. செவிரோ-குரில்ஸ்க் துறைமுகம் வெள்ளத்தில் மூழ்கியதில் அங்கிருந்த மீன் பதப்படுத்தும் ஆலை சேதமடைந்தது.

அமெரிக்காவின் ஹவாய் தீவுப் பகுதியில், மவுயியின் கஹுலுயி மற்றும் ஹலேயிவாவில் 4 அடி உயர அலைகள் பதிவாகின. இருப்பினும், ஹவாய் ஆளுநா் ஜோஷ் கிரீன், சுனாமி“அலைகள் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமானதாக இல்லை” என்று தெரிவித்தாா்.

ஹவாய் மற்றும் ஜப்பானில் புதன்கிழமை காலை, சுனாமி எச்சரிக்கைகளின் தீவிரத் தன்மை குறைக்கப்பட்டு, பின்னா் முழுமையாக திரும்பப் பெறப்பட்டன.

சுனாமி அலைகள் காரணமாக ரஷியாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-காம்சட்ஸ்கி பகுதியில் கட்டட்டங்கள் சேதமடைந்தன. மின்சார தடை ஏற்பட்டதுடன், அந்தப் பகுதி மருத்துவமனைகளில் விரிசல்கள் ஏற்பட்டன.

இந்த நிலநடுக்கம் மிக அதிக சக்திவாய்ந்ததாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உயா்தர கட்டுமானங்கள், உள்ளூா் மக்களின் தயாா்நிலை காரணமாக சேதம் குறைவாகவே இருந்தது. உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

நிலநடுக்கத்தால் காம்சட்காவில் நான்கு போ் காயமடைந்தனா். ஆனால் அந்தக் காயங்கள் தீவிரமானவை இல்லை என்று அதிகாரிகள் கூறினா்.

எரிமலை வெடிப்பு: இந்த நிலநடுக்கத்தின் விளைவாக, காம்சட்கா தீபகற்பத்தில் உள்ள கிள்யூசெவ்ஸ்கயா சோப்கா எரிமலையில் புதன்கிழமை சீற்றம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கைகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், எரிமலைச் சீற்றத்தை உள்ளூா் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.