;
Athirady Tamil News

யேமனில் அடிப்படை வசதிகள் வேண்டி மக்கள் போராட்டம்! அரசு அலுவலகம் சிறைப்பிடிப்பு!

0

யேமன் நாட்டின் கிழக்குப் பகுதிகளில், தொடர்ந்து மின்சாரப் பற்றாக்குறையால், அடிப்படை வசதிகள் கோரி, 3-வது நாளாக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமன் நாட்டில், கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருவதால், அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹத்ராமௌத் மாகாணத்தில், நாள்தோறும் சுமார் 19 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏடன் நகரத்தைத் தலைமையகமாகக் கொண்டுள்ள சர்வதேச அங்கீகாரம் பெற்ற யேமன் அரசுக்கு எதிராக, கடந்த ஜுலை 27 ஆம் தேதி முதல் அம்மாகாணத்தின் தலைநகர் முகல்லா நகரத்தில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் சிலர் அங்குள்ள முக்கிய சாலைகளை முடக்கியதுடன், வாகன டயர்களை தீயிட்டு கொளுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அப்போது, ஹத்ராமௌத் மாகாணத்தின் மின்சாரத் துறை அலுவலகத்தை நேற்று முன்தினம் (ஜூலை 29) போராட்டக்காரர்கள் சிறைப்பிடித்ததால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, யேமன் நாட்டில் பருவமழை சரியான அளவில் பெய்யாத சூழலில், பல்வேறு இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையும் நிலவி வருகின்றது.

மேலும், அந்நாட்டில் நிலவும் வறண்ட வானிலையாலும், தற்போது மின்சாரம் தொடர்ந்து துண்டிக்கப்படுவது மக்களின் வாழ்க்கையை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளியிருப்பதாக, சில தொண்டு நிறுவன அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இத்துடன், 2014-ம் ஆண்டு முதல் யேமனின் அரசுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சிப்படைகளுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது.

இதில், தலைநகர் சனா உள்ளிட்ட முக்கிய வடக்கு மாகாணங்களை ஹவுதிகள் கைப்பற்றியதால், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசு அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.