;
Athirady Tamil News

இரண்டாக உடைந்து விழுந்த ராட்டினம்! சவுதி பூங்காவில் பயங்கரம்: வைரல் வீடியோ

0

சவுதி அரேபியாவில் உள்ள தைஃப் நகரில் ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட விபத்தில், ஒரு ராட்டினம் திடீரென இரண்டாக உடைந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாக உடைந்து விழுந்த ராட்டினம்
அல் ஹடா பகுதியில் உள்ள க்ரீன் மவுண்டன் பூங்காவில் நடந்த இந்த கோரமான சம்பவத்தில் குறைந்தது 23 பேர் படுகாயமடைந்தனர், அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோக்களில் இந்த பயங்கரமான தருணம் பதிவாகியுள்ளது.

360 டிகிரிஸ்” என்று அழைக்கப்படும் அந்த ராட்டினத்தின் நடுவில் இருந்த கம்பம் திடீரென உடைந்து, இருக்கைகள் பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தன.

இந்த விபத்தின் போது ராட்டினத்தில் இருந்தவர்கள் அலறி துடித்ததாகவும், கீழே விழுந்தபோது அவர்களால் வெளியேற முடியவில்லை என்று நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கலீஜ் டைம்ஸ் நாளிதழின் அறிக்கையின்படி, இந்த விபத்தில் மூன்று பேர் மிகக் கடுமையான காயமடைந்துள்ளனர்.

ராட்டினத்தின் கம்பம் வேகமாகச் சுழன்று சில பார்வையாளர்களை தாக்கியதாகவும், ராட்டினத்தின் இருக்கைகள் தரையில் விழுந்ததால் பலர் காயமடைந்ததாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

விரைந்த அவசர உதவி குழுவினர்
விபத்து நடந்த இடத்திற்கு அவசர சிகிச்சை மற்றும் சட்ட அமலாக்கப் பிரிவினர் விரைந்து வந்தனர்.

காயமடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் அவசர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.