;
Athirady Tamil News

உ.பி.: கணவருடனான பிரச்னையால் 3 குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த மனைவி

0

உ.பி.யில் கணவருடனான பிரச்னையால் தனது 3 குழந்தைகளையும் உடலில் சேர்த்து கட்டிக்கொண்டு கால்வாயில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், பண்டா மாவட்டத்தில் உள்ள ரிசௌரா கிராமத்தில் அகிலேஷ் – ரீனா தம்பதியிடையே வெள்ளிக்கிழமை இரவு வீட்டுப் பிரச்னை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ரீனா தனது கணவரிடம் தெரிவிக்காமல் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். மறுநாள் காலையில் 4 பேரும் காணவில்லை என்பதை அறிந்த அவரது மாமியார் தேடத் தொடங்கினர்.

அப்போது கால்வாய் கரைக்கு அருகில் அவர்களின் உடைகள், வளையல்கள், செருப்புகள் மற்றும் பிற பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உடனே இதுகுறித்து போலீஸாருக்கு அவர் தகவல் அளித்தார். காணாமல் போனவர்கள் கால்வாயில் குதித்திருக்கலாம் என்று சந்தேகித்த போலீஸார், கால்வாயில் தேடினர். இறுதியில் கால்வாயில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டன. இறந்தவர்கள் ரீனா மற்றும் அவரது குழந்தைகள் ஹிமான்ஷு 9, அன்ஷி 5, மற்றும் பிரின்ஸ் 3 என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 3 குழந்தைகளையும் உடலில் சேர்த்து கட்டிக்கொண்டு கால்வாயில் ரீனா குதித்திருக்கிறார். இச்சம்பவம் குறித்து அந்தப் பெண்ணின் கணவரைக் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.