;
Athirady Tamil News

காஸா: பத்திரிகையாளர்கள் பலி; கேள்விக்குறியான மக்களின் உயிர்! குண்டுவீச்சு தாக்குதல்களை தீவிரப்படுத்திய இஸ்ரேல்

0

காஸாவில் குண்டுவீச்சு தாக்குதல்களை இஸ்ரேல் ம்ீண்டும் முனைப்புடன் நடத்தியுள்ளதால் ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

காஸாவில் தாக்குதல் திட்டத்தை விரைவுபடுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை(ஆக. 10) அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, காஸா சிட்டியில் (இப்பகுதியே ஹமாஸ் படையின் பயங்கரவாத தாக்குதல்களின் தலைமையிடமாக திகழ்வதாக நெதன்யாகு குறிப்பிடுகிறார்) இஸ்ரேல் ராணுவம் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, காஸா நகரில் இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக தாக்குதல்களை நடத்தக்கூடும் என்றும் மக்கள் அச்சப்படுகிறார்கள். அங்கு சுமார் 1 மில்லியன் மக்கள் பாதுகாப்பு கருதி இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் நிலையில், மக்களின் உயிருக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

காஸா சிட்டியில் தளர்வடைந்த தாக்குதல்கள் மீண்டும் இஸ்ரேல் ராணுவத்தால் முனைப்புடன் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காஸா முனையின் வடக்கு பகுதியில் காஸா சிட்டியில் சாப்ரா, சேய்டோன், ஷெஜாயா ஆகிய மூன்று கிழக்கத்திய புறநகர்ப் பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவ டாங்கிகள் மற்றும் போர் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவில் குண்டு மழை பொழிந்தன. இதனால் அப்பகுதிகளில் பல குடும்பங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி மேற்கு எல்லையை நோக்கி இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் வீடுகளும் கட்டடங்களும் தகர்ந்தன; சாலைகளிலும் குண்டுமழைப் பொழிந்ததை நேரில் பார்த்ததாக அங்குள்ள மக்கள் விவரிக்கின்றனர்.

இஸ்ரேலின் இந்த குண்டுவீச்சு தாக்குதல்களில் முக்கியமாக 6 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். சர்வதேச சமூகத்தில் இந்த நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கும்போது, தங்களது படைகள் ஹமாஸ் படைக்குழுவின் வசிப்பிடங்களைக் குறிவைத்தே தாக்குதல்களை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.