;
Athirady Tamil News

தர்மஸ்தலா விவகாரத்தில் திடீர் திருப்பம்: புகார்தாரரின் வக்கீல் மீது வழக்குப்பதிவு; புகார் அளித்த நபர் கைது

0

தர்மஸ்தலா,

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை சிலர் பாலியல் பலாத்காரம் செய்து, கொன்று உடல்களை நேத்ராவதி ஆற்றங்கரை உள்பட பல்வேறு இடங்களில் புதைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த புகார் தெரிவித்த நபருக்கு ஆதரவாக வக்கீல் மஞ்சுநாத் என்பவர் ஆஜராகி உள்ளார். மேலும் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் புகார்தாரர், எஸ்.ஐ.டி. போலீசாரிடம் அடையாளம் காட்டிய இடங்களில் புதைக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை பற்றியும் தகவல்களை வெளியிட்டார்.

ஆனால் அவர் கூறியதுபோல் எந்த உடல்களும் எஸ்.ஐ.டி. போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து வக்கீல் மஞ்சுநாத் பொய்யான தகவல்களை வெளியிட்டு தர்மஸ்தலா வழிபாட்டு தலத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக தர்மஸ்தலாவை சேர்ந்த ரகுராம் ஷெட்டி பெல்தங்கடி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் வக்கீல் மஞ்சுநாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. புகார் அளித்த சின்னையா என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். சிலருடைய அழுத்தத்தின் பேரில் அவர் பொய் புகார் அளித்திருக்கிறார் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அவருடைய குற்றச்சாட்டில் உண்மை இல்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.