தில்லி கலவர வழக்கு: உமர் காலித் உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
புது தில்லி: தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜவகர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவர்கள் உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்பிஃஷா பாத்திமா, மீரான் ஹைதர் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி வடகிழக்கு தில்லிப் பகுதியில் நடந்த வன்முறையில் 53 பேர் பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கலவரத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி திட்டம் இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு, சந்தேக நபர்கள் மீது உபா எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த கலவரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஜவகர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாணவர்கள் உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் மீது விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக் கொண்ட போது, இணை மனுக்கள் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டால், மனுக்களை முழுமையாகப் படிக்க நேரம் போதவில்லை என்று கூறி, விசாரணையை செப்.19ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில், மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், ஏ.எம். சிங்வி, சி.யு. சிங், சித்தாரத் தாவே உள்ளிட்டோர் ஆஜராகியிருந்தனர்.