;
Athirady Tamil News

காங்கோ குடியரசில் எபோலா நோய்க்கு 31 பேர் பலி

0

காங்கோ குடியரசில் (Democratic Republic of the Congo) எபோலா வைரஸ் நோய் மீண்டும் பரவி வருகிறது. எபோலா வைரஸ் நோயால் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கசாய் மாகாணத்தில் எபோலா நோய் பரவியதாக அறிவிக்கப்பட்டது. அதுமுதல், இதுவரை 48 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும் WHO தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் தகவல்
எபோலா வைரஸ் நோயின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட, 500-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக WHO தெரிவித்துள்ளது.

நோயைக் கட்டுக்குள் கொண்டு வர, சுகாதாரப் பணியாளர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

எபோலா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த WHO, உள்ளூர் சுகாதார நிறுவனங்களுடன் இணைந்து, நோயாளிகளைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், மற்றும் நோய்ப் பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது.

எபோலா வைரஸ் நோய்த் தொற்று, காங்கோ குடியரசில் மீண்டும் எழுந்துள்ளதால், மக்கள் மத்தியில் பெரும் அச்சமும், கவலையும் நிலவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.