;
Athirady Tamil News

மனைவியை கொலை செய்துவிட்டு பேஸ்புக் லைவ்வில் அறிவித்த கணவன்; அதிர்ச்சி சம்பவம்

0

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூரை சேர்ந்தவர் ஐசக். இவரது மனைவி ஷாலினி (வயது 39). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இதனிடையே, கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. ஷாலினியின் நடத்தையில் ஐசக் சந்தேகப்பட்டுள்ளார். மேலும், ஷாலினி தனக்கு தெரியாமல் நகைகளை அடகு வைத்ததாகவும் ஐசக் குற்றஞ்சாட்டி வந்தார். இதையடுத்து, ஐசக் வீட்டை விட்டு வெளியேறிய ஷாலினியின் வல்லக்கோட்டில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், ஐசக் இன்று ஷாலினியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சமையல் அறைக்கு வெளியே நின்றுகொண்டிருந்த ஷாலினியை ஐசக் தான் மறைத்து கொண்டு வந்த கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் ஷாலினி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

இதையடுத்து, ஐசக் தனது செல்போனில் பேஸ்புக்கில் லைவ் வீடியோவில் மனைவியை கொலை செய்துவிட்டதாக அறிவித்தார். மேலும், புனலூரில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்ற ஐசக் மனைவியை கொலை செய்துவிட்டதாக சரண் அடைந்தார். உடனடியாக ஐசக்கை கைது செய்த போலீசார், ஷாலினியின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு ஷாலினி சடலமாக கிடந்த நிலையில் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை குறித்து ஐசக்கிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.