;
Athirady Tamil News

பாகிஸ்தானில் 23 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

0

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், பாதுகாப்புப் படையினரால் பாகிஸ்தான் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 23 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கைபர் பக்துன்குவா மாகாணத்தின் குர்ராம் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் (நவ. 19) தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த தெஹ்ரிக் – இ – தலிபான் பாகிஸ்தான் எனும் தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த 12 தீவிரவாதிகள் பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ராணுவ நடவடிக்கையில் மேலும் 11 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 16 ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டுகளை பறிமுதல் செய்துள்ளதாக, பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல் பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக, பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.