;
Athirady Tamil News

தாய்லாந்து – கம்போடியா எல்லையில் மீண்டும் மோதல்! லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

0

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையில் மீண்டும் மோதல்கள் தொடங்கியுள்ளதால், இருநாடுகளின் எல்லைப் பகுதிகளில் வசித்து வந்த லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையில் நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை நிலவி வருகின்றது. இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையில் கடந்த ஜூலை மாதம் 5 நாள்கள் நடைபெற்ற போரில் 48 பேர் கொல்லப்பட்டனர்.

பின்னர், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் முயற்சியால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமானது.

இதனைத் தொடர்ந்து, நவம்பர் மாதம் கம்போடியாவுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை தாய்லாந்து அரசு ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால், இருநாடுகளின் எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் உருவான நிலையில், கடந்த டிச.8 ஆம் தேதி தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லையில் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், எல்லையில் அமைந்துள்ள 4 மாகாணங்களில் இருந்து 4,00,000-க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 700 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தாய்லாந்து ராணுவம் இன்று (டிச. 10) தெரிவித்துள்ளது.

இதேபோல், கம்போடியா எல்லையில் வசித்து வந்த 1,27,000-க்கும் அதிகமான கிராமவாசிகள் வெளியேற்றப்பட்டு, நூற்றுக்கணக்கான பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதாக, கம்போடியாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.