புர்கா அணியவில்லை; மனைவி மகள்களை கொன்று வீட்டிற்குள் புதைத்த நபர்; பீதியில் உறைந்த கிராமம்!
புர்கா அணியவில்லை என ஏற்பட்ட தகராறில் மனைவி, 2 மகள்களை கொன்று வீட்டுக்குள் புதைத்த சம்பவத்தால் கிராமமே பீதியில் உறைந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வீட்டினுள் புதைக்கப்பட்ட 3 பேரின் உடல்
உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் ஹொரி தவுலத் கிராமத்தை சேர்ந்தவர் பரூக்கி. இவருக்கு திருமணமாகி தகீரா என்ற மனைவியும், அப்ரீன் (வயது 12), சஹாரீன் (வயது 5) என 2 மகள்களும் இருந்தனர்.
இந்நிலையில், கடந்த 10ம் திகதி தகீரா புர்கா அணியாமல் வீட்டை விட்டு வெளியே தெருவில் நடந்து சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பரூக்கி புர்கா அணியாமல் வீட்டை விட்டு வெளியே சென்றது குறித்து மனைவி தகீராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மனைவி தகீராவை பரூக்கி சுட்டுக்கொன்றார்.
தடுக்க முயன்ற மூத்த மகள் அப்ரீனையும் சுட்டுக்கொன்ற பரூக்கி இளைய மகள் சஹாரீனை கழுத்தை நெரித்து கொலை செய்தார். மனைவி, 2 மகள்களை கொன்ற பரூக்கி 3 பேரின் உடல்களையும் வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி புதைத்துள்ளார்.
மருமகளும், பேத்திகளும் 5 நாட்களாக காணாமல் சென்றது குறித்து பரூக்கியின் தந்தை பொலிஸில் புகார் அளித்துள்ளார். புகாரின அடிப்படையில் பரூக்கியிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் புர்கா அணியாமல் வீட்டை விட்டு வெளியேறியதால் மனைவியையும் , தடுக்க முயன்ற 2 மகள்களையும் கொன்று புதைத்ததாக பரூக்கி பொலிஸாரிடம் கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார், பரூக்கியை கைது செய்தனர். பின்னர், வீட்டினுள் புதைக்கப்பட்ட 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
புர்கா அணியாமல் வீட்டை விட்டு வெளியே சென்ற மனைவி, 2மகள்களை பரூக்கி கொன்று புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.