லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; 15 பேர் பலி
பெய்ரூட்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் 180-க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது.
ஈரானும் பதிலுக்கு இஸ்ரேலை தாக்கி வருகிறது. இந்த சூழலில், ஈரானுக்கு ஆதரவாக லெபனான் நாட்டில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு பதிலடி தாக்குதலை தொடுத்து வருகிறது. இதனால், லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுபற்றி லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களை இலக்காக கொண்டு இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்தியது. இதில், 15 பேர் பலியாகி உள்ளனர். 15 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல்களை நடத்துவோம் என அறிவித்து உள்ளது. இதனால், லெபனான் தலைநைகர் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் பெய்ரூட்டில் உள்ள ஓட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். ஜபால் அல்-பதவும் மற்றும் காபிர் ரும்மன் நகரங்களில் 5 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவித்து உள்ளது.