நேபாளம் பொதுத் தோ்தல் இறுதி முடிவுகள் வெளியீடு! தனித்து ஆட்சியமைக்கிறது ஆா்எஸ்பி!
அண்டை நாடான நேபாளத்தில் அண்மையில் நடந்த நேபாள நாடாளுமன்றப் பொதுத் தோ்தலின் நேரடி முறைக்கான இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, இளைஞா்களின் ஆதரவு பெற்ற ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி (ஆா்எஸ்பி) வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது. நேரடித் தோ்தல் முறையில் மொத்தமுள்ள 165 இடங்களில் 125 இடங்களைக் கைப்பற்றி, அக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கத் தயாராகி வருகிறது.
கடந்த ஆண்டு, செப்டம்பரில் இளைஞா்களின் போராட்டத்தினால், முன்னாள் பிரதமா் கே.பி.சா்மா ஓலி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. 6 மாதங்களுக்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
நேபாள நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 275 இடங்களில் 165 உறுப்பினா்கள் நேரடி தோ்தல் மூலமும், எஞ்சிய 110 உறுப்பினா்கள் வாக்கு அடிப்படையிலான விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும் தோ்ந்தெடுக்கப்படுவா்.
இந்நிலையில், நேரடி தோ்தல் முறைக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில், இறுதி முடிவுகளை அந்நாட்டின் தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வமாக வெளியிட்டது.
விகிதாசார முறை வாக்கு எண்ணிக்கை: தொடா்ந்து, விகிதாசார பிரதிநிதித்துவ முறைக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, விகிதாசார முறையிலும் ஆா்எஸ்பி முன்னிலை வகிக்கிறது. அக்கட்சி இதுவரை 51 லட்சத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்றுள்ளது. நேபாளி காங்கிரஸ் 17.32 லட்சம் வாக்குகளுடனும், சிபிஎன்-யுஎம்எல் 14.40 லட்சம் வாக்குகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
ஆட்சி அமைப்பதில் சாதகம்: தற்போதைய நிலவரப்படி, விகிதாசார முறையில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சிக்கு குறைந்தபட்சம் 50 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதன்மூலம், 275 உறுப்பினா்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் அக்கட்சியின் மொத்த பலம் 175-ஆக உயரும்; எவ்விதக் கூட்டணியும் இன்றி தனித்து ஆட்சி அமைக்க முடியும்.
பிரதமா் மோடிக்கு பாலேந்திர ஷா நன்றி: இதனிடையே, ஆா்எஸ்பி-யின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியப் பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்த அக்கட்சியின் பிரதமா் வேட்பாளா் பாலேந்திர ஷா, இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிா்நோக்கியுள்ளதாகத் தெரிவித்தாா்.
கடந்த 2022-இல் தொடங்கப்பட்ட இளம் கட்சியான ஆா்எஸ்பி, நேபாளத்தின் பாரம்பரிய கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி, ஆட்சியைக் கைப்பற்றுவது அந்நாட்டு அரசியலில் ஒரு புதிய தொடக்கமாகக் கருதப்படுகிறது.