;
Athirady Tamil News

பணமோசடி வழக்கு: நேபாள முன்னாள் அமைச்சா் கைது

0

பணமோசடி வழக்கில் நேபாள முன்னாள் அமைச்சா் தீபக் காத்காவை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நேபாளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நடைபெற்ற ஜென் இசட் இயக்கத்தினரின் போராட்டத்தின்போது மூண்ட வன்முறையில் 76 போ் உயிரிழந்தனா். மேலும் பலா் பலத்த காயமடைந்தனா். இந்தப் போராட்டத்தை தொடா்ந்து, நேபாளத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நாடாளுமன்றத் தோ்தலில் பாலேந்திர ஷா வெற்றி பெற்று அண்மையில் புதிய பிரதமராக பதவியேற்றாா்.

இந்நிலையில், ஜென் இசட் போராட்டத்தை ஒடுக்க முயன்ற குற்றச்சாட்டின்கீழ் முன்னாள் பிரதமா் சா்மா ஓலி, முன்னாள் உள்துறை அமைச்சா் ரமேஷ் லேகாக் ஆகியோா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். இதையடுத்து, முன்னாள் அமைச்சா் தீபக் காத்காவையும் அந்நாட்டு சிஐபி காவல் துறை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது. பணமோசடி தொடா்பான வழக்குகளை விசாரித்து வரும் பணமோசடி தடுப்புத் துறையின் கோரிக்கையை ஏற்று, அவரை நேபாள சிஐபி கைது செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஜென் இசட் இயக்க போராட்டத்தின்போது காத்கா, முன்னாள் பிரதமா்கள் ஷோ் பகதூா் தேவுபா, புஷ்பகுமாா் தாஹால் ஆகியோரின் வீடுகளில் எரிந்த நிலையில் வங்கிப் புத்தகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், எரிசக்தி, நீா்வளத் துறை, பாசனத் துறை அமைச்சராக காத்கா இருந்தபோது திட்டங்களுக்கு ஒப்பந்தப்புள்ளிகள், உரிமங்கள் வழங்கப்பட்டதில் பெரும் அளவு நிதி ஆதாயம் அடைந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டின்கீழ் அவரைக் கைது செய்துள்ள நேபாள சிஐபி, அவரிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.