;
Athirady Tamil News

மத்திய கிழக்கு போரின் தாக்கம் ; மின்சாரத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க அதிரடித் திட்டம்

0

நாட்டில் நிலவும் எரிசக்தி சவால்களை எதிர்கொள்ளும் வகையில், பொதுமக்களை மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த ஊக்குவிக்கும் “இலங்கையைக் காப்போம்” எனும் தேசியத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எரிசக்தி வளங்களை மிகவும் அவதானமாகப் பேணிப் பாதுகாக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் எல்-நினோ காலநிலை மாற்றங்களைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் நேற்று முதல் அடுத்த ஐந்து மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும். Clean Sri Lanka முன்முயற்சியின் கீழ், “இலங்கையைக் காப்போம் – ஒன்றிணைவோம் – ஒளியேற்றுவோம்” எனும் மகுட வாக்கியத்துடன் இது முன்னெடுக்கப்படுகிறது.

அரச மற்றும் அரை அரச நிறுவனங்கள், தனியார் துறை, சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இதில் பங்களிக்க எதிர்பார்க்கப்படுகின்றனர்.

இரவு 6.00 மணி முதல் 10.00 மணி வரை உள்ள மின்சாரப் பயன்பாடு அதிகமுள்ள நேரங்களில் (Peak Hours), மின் பாவனையை மட்டுப்படுத்துமாறு அல்லது அதிக மின்சாரம் தேவைப்படும் வேலைகளைப் பகல் நேரங்களில் மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இத்திட்டம் மின்சாரப் பயன்பாட்டிற்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை மாறாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கையின் மின் உற்பத்தியில் பெரும்பகுதி நீர்மின் நிலையங்களையே நம்பியுள்ளதால், வருங்காலத்தைக் கருத்திற் கொண்டு நீரையும் மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.

அரச வளங்களை அதிகபட்சத் திறனுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்துவதன் மூலம், தேசிய எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யப் பொதுமக்களின் நேரடிப் பங்களிப்பை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.