;
Athirady Tamil News

இஸ்ரேல் ராணுவ தளங்கள் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தொடர்ச்சியாக தாக்குதல்

0

பெய்ரூட்

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள், தலைவர்கள், தளபதிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. 4 வாரங்களாக நீடித்து வரும் இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டது. இதனால், லெபனானையும் இஸ்ரேல் தாக்கியது. இடையில் ஹமாஸ் அமைப்பும் தாக்குதலை தொடுத்தது.

இந்த சூழலுக்கு இடையே, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து அதிகரிக்கும் என்றால், நாங்கள் நேரடியாக ராணுவ மோதலில் ஈடுபட தயாராக இருக்கிறோம் என்று ஏமன் நாட்டிலுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த சூழலில், இஸ்ரேலின் வடக்கே அல்-மலிகியா பகுதியிலுள்ள வாகனங்கள் மற்றும் இஸ்ரேல் படையினர் மீது சால்வோஸ் ரக ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பு இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ளது. லெபனானில் இருந்து செயல்படும் அந்த அமைப்பு, இஸ்ரேலின் வடக்கே உள்ள சாபேத் நகரருகே இஸ்ரேல் ராணுவ தளங்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு அந்த அமைப்பு பொறுப்பேற்று கொண்டுள்ளது.

தொடர்ந்து, சாபேத் நகரில் இருந்து சற்றே தொலைவிலுள்ள மஹவா ஆலன் ராணுவ தளம் மீதும் பெரியா தளத்தின் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு லெபனானின் டெய்ர் சிரியன் பகுதியில் இஸ்ரேலின் பீரங்கி படைகள் மீதும் தாக்குதல் நடத்தினோம் என்று ஹிஸ்புல்லா கூறியுள்ளது. இதனால், லெபனானில் எல்லை கடந்து தரை வழி தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டு உள்ளது உறுதியாகி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.