யாழ். வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் வெளியான புதிய தகவல்கள்
புதுவருட கொண்டாட்டத்திற்காக கொழும்பில் இருந்து தனது வீட்டிற்கு வந்த இளைஞர் ஒருவர் நேற்றிரவு நக்கிள்ஸால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய இளைஞர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொல்புரம், சித்தம்பி கோவிலடியை சேர்ந்த 27 வயதுடையவரே உயிரிழந்துள்ளதுடன், 26 வயதுடைய மற்றைய நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், ஒரே ஊரைச் சேர்ந்த இவ்விரு இளைஞர்களுக்கிடையே கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நிலவி வந்த பகைமையே இந்த மோதலுக்குக் காரணமாகும்.
இந்நிலையில் உயிரிழந்த இளைஞர் கொழும்பில் வேலை செய்துவரும் நிலையில் புதுவருட கொண்டாட்டத்திற்காக நேற்றையதினம் வீட்டுக்கு வருகைதந்துள்ளார்.
இதன்போது மீண்டும் முரண்பாடு ஆரம்பமானதோடு, இரண்டு தரப்பிலிருந்தும் இருவர், இருவர் என நால்வருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது உயிரிழந்த நபர் கத்தியால் குத்தியவேளை மற்றையவருக்கு காயம் ஏற்பட்டதோடு, இதன்போது காயமடைந்த நபர் நக்கிள்ஸ் மூலம் நெஞ்சில் தாக்கிய நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
