அல்லைப்பிட்டியில் மனித எலும்புக் கூடு மீட்பு – கொலையா தற்கொலையா என பொலிசார் தீவிர விசாரணை!
வேலணை அல்லைப்பிட்டி பகுதி பற்றைக் காணி ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரின் எலும்புக் கூடுகள் மிகவும் உக்கிய நிலையில் இன்று(14)அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்தனர்.
சுமார் 4 முதல் 6 மாதங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஒருவரது எலும்புக் கூடே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கும் ஊர்காவற்றுறை பொலிசார் குறித்த எலும்புக் கூடுகள் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ உடற்கூற்று பின்னரே உறுதியாக கூறமுடியும் என்றும் தெரிவித்தனர்.
முன்பதாக குறித்த பகுதி ஒன்றின் பற்றைக் காணி ஒன்றில் எலும்புக் கூடுகள் இருப்பதாக பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு பொதுமகன் ஒருவரால் தகவல் வழங்கப்பட்ட நிலையில் நடவடிக்கையில் இறங்கிய பொலிசார் குறித்த எலும்புக் கூடுகளை அடையாளம் கண்டதாகவும், இதனடிப்படையில் குறித்த எலும்புக்கூட்டை பொலிசார், நீதிபதி, மரணவிசாரணை அதிகாரி மற்றும் கிராமசேவகர் உள்ளிட்ட பலரது முன்னிலையில் மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக யாழ் போதனா மருத்துவ மனைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் குறித்த எலும்புக் கூடு எரிந்த நிலையில் தோற்றமளிப்பதாக இருப்பதாகவும் சந்தேகிக்கப்படும் நிலையில் குறித்த விடையம் அப்பகுதிய பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
