;
Athirady Tamil News

இலங்கையில் துரித உணவுகளுக்கு தடையா?

0

ஆரோக்கியத்திற்குத் தீங்கான துரித உணவுகளை இலங்கையில் முழுமையாகத் தடை செய்வது அல்லது முறைப்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் வானிலை மற்றும் பாரம்பரிய விவசாய முறைகள் காரணமாக இயற்கையான சத்துமிக்க உணவுகள் கிடைக்கப்பெற்றாலும், ஆரோக்கியமற்ற அல்லது குறைந்த சத்துடைய உணவுகளின் நுகர்வு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்தார்.

சிறுவர்கள் துரித உணவுகளுக்கு அடிமை
சிறுவர்கள் துரித உணவுகளுக்கு அடிமையாகி வருவதாகவும், அதே நேரத்தில் பல அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் உணவைத் தவிர்ப்பதுடன், ஊட்டச்சத்து இல்லாத அல்லது மிகக் குறைந்த ஊட்டச்சத்துள்ள துரித உணவுகளைத் தேர்ந்தெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தடை அவசியமானதாக இருப்பினும் அதனை நடைமுறைப்படுத்துவது மிகவும் சிக்கலானது என்றும், இந்த முடிவுகள் எளிதாக அரசியல் மயப்படுத்தப்படலாம் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், இந்த உணவுகளைத் தடை செய்வது அல்லது முறைப்படுத்துவது குறித்து அமைச்சு ஆராய்ந்து வருகிறது. வயம்ப பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ரேணுகா சில்வாவின் ஆய்வின் அடிப்படையில் இந்த விடயம் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை கொவிட்-19 பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி மற்றும் ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி போன்ற காரணங்களால் ஏற்பட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வு, பலரையும் மலிவான, ஊட்டச்சத்து குறைந்த உணவு விருப்பங்களை நோக்கித் தள்ளியுள்ளதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.