;
Athirady Tamil News

வீரமிக்க முயற்சிக்கு வார்த்தைகளால் நன்றி கூற முடியாது – யாழ்.போதனாவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தவர்களுக்கு ஆளுநர் பாராட்டு

0
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து மிகப் பெரிய சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சென்று பார்வையிட்டு , வைத்தியசாலை பணிப்பாளரிடம் நிலைமைகளைக் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஆளுநரை அழைத்துச் சென்று நிலைமைகளை நேரில் விளக்கினார்.

இதன்போது, தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தமது உயிரையும் பொருட்படுத்தாது, மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் படையினருக்கு ஆளுநர் நேரில் சென்று தனது விசேட பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

‘பெரும் சேதத்தைத் தணிப்பதற்கு நீங்கள் எடுத்த இந்த வீரமிக்க முயற்சிக்கு வார்த்தைகளால் நன்றி கூற முடியாது’ என தீயணைப்பு வீரர்களிடம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அத்துடன், இத்தீயைக் கட்டுப்படுத்தும் கூட்டு முயற்சியில் உடனடியாகச் செயற்பட்டுச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய இராணுவத்தினர், விமானப் படையினர் மற்றும் பொலிஸாருக்கும் ஆளுநர் தனது கௌரவத்தையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

மேலும், இக்கட்டான இச்சூழ்நிலையில் அர்ப்பணிப்புடன் இணைந்து செயலாற்றிய மருத்துவமனைப் பணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனை ஊழியர்களுக்கும் ஆளுநர் விசேட நன்றிகளைத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.