;
Athirady Tamil News

ஒலுவில் அஷ்ரப் நகரில் பாரிய கூட்டுச் சிரமதானம்: உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்து கழிவு முகாமைத்துவப் பணி

0

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் திண்மக்கழிவு நிலநிரப்பு நிலையத்தை சீர்செய்யும் நோக்கில், பல உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்த பாரிய விசேட வேலைத்திட்டம் இன்று  முன்னெடுக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ்  தலைமையில், பிராந்தியத்தின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் இந்தச் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

ஒன்றிணைந்த உள்ளூராட்சி மன்றங்கள் இந்த விசேட வேலைத்திட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையுடன் இணைந்து சம்மாந்துறை பிரதேச சபை,நாவிதன்வெளி பிரதேச சபை,நிந்தவூர் பிரதேச சபை,காரைதீவு பிரதேச சபை,ஆலையடிவேம்பு பிரதேச சபை ஆகிய நிறுவனங்கள் தங்களது கனரக வாகனங்கள், கழிவு அகற்றும் இயந்திரங்கள் மற்றும் ஊழியர் வளங்களை வழங்கிப் பாரிய ஒத்துழைப்பினை வழங்கின. இதன் மூலம் நிலநிரப்பு நிலையத்தில் தேங்கிக்காணப்பட்ட கழிவுகள் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டன.

இப்பணியின் நிறைவில் உரையாற்றிய தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்கள், “சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதும் காலத்தின் கட்டாயமாகும். எமது அழைப்பினை ஏற்று, தங்களது வளங்களைப் பகிர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அண்டை பிரதேச சபைகளின் தவிசாளர்கள், செயலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஆர்.ஏ.நழீல்  மேற்பார்வையாளர்,  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு களப்பணிகளை ஒருங்கிணைத்தனர்.

இப்பிராந்தியத்தின் கழிவு முகாமைத்துவப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்தக் கூட்டு முயற்சி பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.