ஐந்து கிலோ கிராம் தங்கம் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி!
நீர்கொழும்பு பிரதேசத்தில் ஐந்து கிலோ கிராம் தங்கத்தை வழங்குவதாகக் கூறி, வர்த்தகர் ஒருவரிடம் 1,800 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தைப் பெற்று மோசடி செய்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நபரை நாளை (12) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தார்.
1,800 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பண மோசடி
சந்தேகநபரை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அதன்படி, நாளை குறித்த நபரை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் பணிப்புரை விடுத்துள்ளார்.
பெரியமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் 5 கிலோ தங்கத்தைத் தருவதாகக் கூறி, 1,800 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தை மோசடி செய்தமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சந்தேகநபர்கள் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.