;
Athirady Tamil News

சாமி சிலையின் கையில் இரத்தம் சொட்ட துண்டாக கிடந்த மனித தலை ; வழக்கில் புதிய திருப்பம்

0

அம்பலாந்தோட்டை, மாமடல, பொகுட்டயாய பிரதேசத்தில் நபரொருவரின் கழுத்தை துண்டித்து கொலை செய்து, அவரது தலையை மாமடல சந்தியிலுள்ள சிலையொன்றில் தொங்கவிட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ‘கருணே லொக்கா’ எனப்படுபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பல குற்றவியல் வழக்குகள்
இவருக்கு எதிராகப் பல குற்றவியல் வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இந்த கொலை சம்பவம் கடந்த 11ஆம் திகதி இரவு நடைபெற்றிருந்தது.அவர் கொலை செய்யப்பட்டதன் பின்னர், அவரது தலை அம்பலாந்தோட்டை மாமடல சந்தியில் அமைந்துள்ள சிலையின் கைகளுக்கு மேல் வைக்கப்பட்டிருந்தது.

கொலை செய்யப்பட்ட நபர் இதற்கு முன்னர் மாமடல பிரதேசத்தில் இடம்பெற்ற முக்கொலை சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளின் போது அம்பலாந்தோட்டை பொலிஸ் அதிகாரிகள், சந்தேகநபர் ஒருவரை அப்பகுதியிலேயே கைது செய்திருந்தனர்.

பின்னர், தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் லுணுகம்வெஹெர பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் ஜூன் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதற்கமைய, அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் மாமடல பகுதியில் நடமாடுவதாகத் தகவல் காவல்துறையினருக்கு கிடைத்திருந்தது. இதன்போது உடனடியாகச் செயற்பட்ட அம்பலாந்தோட்டை பொலிஸ் அதிகாரிகள், நேற்று (21) இரவு சந்தேகநபரை மாமடல பகுதியில் வைத்து கைது செய்தனர்.

சந்தேகநபரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.