வெளிநாடொன்றில் 2,000 இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு
துபாய் அல் மக்தூம் சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக 2,000 இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அல்மக்தூம் விமான நிலைய விரிவாக்க பணிகளை மேற்கொள்ளும் சீனாவின் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் (CHEC) நிறுவனம் இது தொடர்பில் துபாயில் உள்ள இலங்கைத் துணைத் தூதரக அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
சர்வதேச விமான நிலையம்
துபாயின் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றான அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய விரிவாக்கப் பணிகளை சைனா ஹார்பர் இன்ஜினியரிங் (CHEC) நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.
குறித்த பணிகளில் திறமையான மற்றும் ஓரளவு திறமையான இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதில் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் (CHEC) நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த திட்டத்திற்காக சுமார் 2,000 இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்த CHEC திட்டமிட்டுள்ளது.
அல் மக்தூம் சர்வதேச விமான நிலைய விரிவாக்கமானது, வரும் ஆண்டுகளில் திட்டமிடப்பட்டுள்ள முக்கிய கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பின்னர், சகல வசதிகளும் கொண்ட உலகின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து மையங்களில் ஒன்றாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.