;
Athirady Tamil News

முச்சக்கர வண்டி கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

0

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணையாக, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கட்டண மீட்டர்களைப் பயன்படுத்தி இயக்கப்படும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலுள்ள முச்சக்கர வண்டிகளுக்கான முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 130 ரூபாய் வரை உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முன்மொழிவை மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் விலைக்கட்டுப்பாட்டுக் குழுவிடம் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக அச்சங்கத்தின் முதன்மைச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முதன்மைச் செயலாளர்,

கடந்த முறையில் ஒரு லீற்றர் பெட்ரோல் விலை 12 ரூபாயினாலும், இம்முறை 24 ரூபாயினாலும் என, அண்மைய இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டும் எரிபொருள் விலை 36 ரூபாயினால் அதிகரித்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, எரிபொருள் விலைக்கு மேலதிகமாக முச்சக்கர வண்டிகளுக்கு அத்தியாவசியமான கிரீஸ், இன்ஜின் ஆயில் உள்ளிட்ட வழுவூட்டி வகைகள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலைகளும் வேகமாக அதிகரித்துள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

இந்தச் சூழ்நிலையில் கட்டணத் திருத்தம் செய்யப்படாவிட்டால், ஒட்டுமொத்த முச்சக்கர வண்டித் தொழிலும் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதாக ரோஹண பெரேரா வலியுறுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.