தூக்கு மேடைதான் மகிந்த ராஜபக்சவுக்கு தண்டனை ; சரத் பொன்சேகா அதிரடி
கடந்த காலக் குற்றங்களுக்காக மகிந்த ராஜபக்சவுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டியது கட்டாயம் என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு நேரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதன்போது சரத் பொன்சேகா கூறுகையில்,
24 மணி நேரத்திற்குள் மகிந்த ராஜபக்சவை கைது செய்ய முடியும்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டு அவர் தூக்கிலிடப்படாவிட்டால், இந்த அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்பியுள்ளது என்பதைத் தாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர திசாநாயக்க உட்பட இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் எவ்வளவுதான் தங்களைப் பற்றிப் பெருமை அடித்துக் கொண்டாலும், கடந்த காலக் குற்றங்களுக்காக மகிந்த ராஜபக்சவுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டியது கட்டாயம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தாம் தற்போது அதிகாரத்தில் இல்லாவிட்டாலும், நாட்டு நலனுக்காக உண்மையைப் பேச ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்று முழங்கிய சரத் பொன்சேகா, அரசாங்கம் நினைத்தால் வெறும் 24 மணி நேரத்திற்குள் மகிந்த ராஜபக்சவைச் சட்டத்தின் முன் நிறுத்தி உத்தியோகபூர்வமாகக் கைது செய்ய முடியும் என வழி காட்டியுள்ளார்.
இந்த நாட்டிற்கான கடமையையும், மக்களுக்குச் செய்ய வேண்டிய சேவையையும் அரசாங்கம் நிறைவேற்றும் நாளில் மட்டுமே தற்போதைய ஆட்சியைத் தாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வோம் என்றும், மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட வேண்டிய இறுதித் தண்டனை அவர் தூக்கு மேடையில் நிறுத்தப்படுவதுதான் என்றும் பொன்சேகா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.