;
Athirady Tamil News

ஈரான் மூடியதாக அறிவித்த ஹோர்முஸ் நீரிணை திறந்தே உள்ளது! – அமெரிக்கா

0

ஈரான் மூடியதாக அறிவித்த ஹோர்முஸ் நீரிணை, திறந்தே உள்ளது என்று அமெரிக்க மத்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த திங்களன்று (ஜூன் 8) ஹோர்முஸ் நீரிணை அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவத்தின் அபாச்சி ஹெலிகாப்டரை ஈரான் படைகள் சுட்டு வீழ்த்தின.

இதற்குப் பதிலடி தரும் வகையில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்களைத் தொடர்ந்தது. இதனால், உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப் போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாக மூடியதாக ஈரானிய புரட்சிகர காவல்படை வியாழக்கிழமை (ஜூன் 11) அறிவித்தது. மேலும், இந்தத் தடையை மீறி ஹோர்முஸ் வழியாக செல்லும் கப்பல்கள் அழிக்கப்படும் என்றும் தெரிவித்தது.

ஏற்கெனவே, ஹோர்முஸ் நீரிணை வழக்கம் போல் செயல்படாமல் உள்ளதால் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்து வருகிறது. இது மாதிரியான ஈரானின் அறிவிப்புகள் கச்சா எண்ணெய்யின் விலையை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க மத்திய ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து செல்லும் வர்த்தகக் கப்பல்களைத் தாக்கும் முயற்சியில், ஈரான் பல டிரோன் விமானங்களை ஏவியது. அந்த நீரிணை வழியாகப் போக்குவரத்து தடையின்றித் தொடர்வதால், அமெரிக்கப் படைகள் கடந்த சில மணிநேரங்களில் அவை அனைத்தையும் சுட்டு வீழ்த்தின. ஆகையால், இந்த சர்வதேச வர்த்தக வழித்தடம் போக்குவரத்துக்காக திறந்தே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.