புங்குடுதீவு பெத்தப்பா கோயிலில் தளத்துடன் கூடிய புதிய தண்ணீர் தாங்கி திறந்து வைப்பு..
புங்குடுதீவு பெத்தப்பா கோயிலில் தளத்துடன் கூடிய புதிய தண்ணீர் தாங்கி திறந்து வைப்பு.. (வீடியோ)
புங்குடுதீவு பதினோராம் வட்டார பெத்தப்பா சிவன் கோயில், பாரதி விளையாட்டுக் கழகம், மற்றும் பாரதி சனசமூக நிலைய அங்கத்தவர்கள், அடியார்கள் நிர்வாகசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் பாவனைக்காக புங்குடுதீவு பெத்தப்பா கோயிலில் தளத்துடன் கூடிய புதிய தண்ணீர் தாங்கி திறந்து வைக்கப்பட்டது.
புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தை சேர்ந்தவர்களும், லண்டனில் அமரத்துவமடைந்தவர்களுமான சொக்கர், நாகேஷ் என அழைக்கப்பட்ட அமரர்கள் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகத் தலைவருமான திரு.திருமதி.கருணைலிங்கம் ஆனந்தி தம்பதிகளின் பேரனின் முழுமையான நிதிப் பங்களிப்பில், பிரதேசசபை உறுப்பினர் சஞ்சீவன் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய பெத்தப்பா சிவன் ஆலயத்துக்கு தளத்துடன் கூடிய தண்ணீர் தாங்கி புதிதாக அமைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (28.09) மாலை நான்கு மணிக்கு மக்களின் பாவனைக்கு ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்களால் மங்கள விளக்கேற்றப்பட்டு, இறைவணக்கம் பாடப்பட்டு ஆரம்பிக்கப் பட்டதுடன், விருந்தினர்கள் அனைவரின் சிறப்புரையும் நடைபெற்ற பின்னர் புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், முன்னாள் அதிபருமான திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய முன்னாள் தலைவர்களில் ஒருவரும், சமய,சமூக செயற்பாட்டாளருமான சாய் ரேடேர்ஸ் திரு.இராசமாணிக்கம் இரவீந்திரன் ஆகியோரினால் பொதுமக்களின் கரகோஷத்துடன் தண்ணீர் தாங்கி திறந்து வைக்கப்பட்டதுடன் சிறியோர் முதல் பெரியோர் வரை தண்ணீரைப் பருகி தமது மகிழ்ச்சியையும், நன்றியையும் பகிர்ந்து கொண்டனர்.
பெத்தப்பா சிவன் ஆலயத்துக்கு தளத்துடன் கூடிய தண்ணீர் தாங்கி புதிதாக அமைத்து கொடுக்கும் நடவடிக்கையானது தீர்ப்பாயம் குழுமத்தின் சார்பில் தீர்ப்பாயம் குழும உறுப்பினர்களில் ஒருவரும், ஊர்ப்பற்றாளனுமான திரு.பரமலிங்கம் மயூரன் அவர்களின் ஏற்பாட்டிலும், கட்டிடக் கலைஞர் திரு.அழகேசன், பிரதேச சபை உறுப்பினர் திரு.சஞ்சீவ், ஜெ 26 அபிவிருத்திக்குழுத் தலைவர் திரு.சேயோன் மற்றும் இவர்களின் நண்பர்களின் மேற்பார்வையிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், முன்னாள் அதிபருமான திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய முன்னாள் தலைவர்களில் ஒருவரும், சமய,சமூக செயற்பாட்டாளருமான சாய் ரேடேர்ஸ் திரு.இராசமாணிக்கம் இரவீந்திரன், பிரதேச சபை உறுப்பினர் திரு.சஞ்சீவ், தீவகசிவில் சமூகம் அமைப்பின் சார்பில் அதன் உபதலைவரும், சமூக செயற்பாட்டாளருமான திரு.குணாளன், அம்பலவாணர் அரங்கின் திருமதி.சுகந்தா, மற்றும் பெத்தப்பா சிவன் ஆலய நிர்வாகத்தினர், பாரதி விளையாட்டுக் கழக, பாரதி சனசமூக நிலைய நிர்வாகத்தினர், பாரதி முன்பள்ளி ஆசிரிய,ஆசிரியர்கள், மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
இதேவேளை இந்நிகழ்வில் புங்குடுதீவு பதினோராம் வட்டார பெத்தப்பா சிவன் கோயில் நிர்வாக செயலர் திரு.ஜெயரெட்ணம் அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய முன்னாள் தலைவர்களில் ஒருவரும், சமய,சமூக செயற்பாட்டாளருமான சாய் ரேடேர்ஸ் திரு.இராசமாணிக்கம் இரவீந்திரன் அவர்கள் இவ்வாலயத்துக்கு மலசல கூடமொன்றை அமைத்துத் தருவதாக உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும்
