;
Athirady Tamil News

ஆப்பிரிக்கா: தங்கச் சுரங்கம் சரிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு

0

பாங்குயி,

மத்திய ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் சரிந்து விழுந்து மண்ணில் புதைந்து பலியானவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.

ஆபத்தான சூழலில்

ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஏழை நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவது பாரம்பரிய தங்கச்சுரங்கத் தொழிலாகும். எவ்வித நவீனப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, உயிரைப் பணையம் வைத்து மண்ணைத் தோண்டி தங்கம் எடுக்கும் ஆபத்தான வேலைகளில் இங்குள்ள தொழிலாளர்கள் தினசரி ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய ஆபத்தான சூழலில், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் கேமரூன் எல்லைக்கு அருகே உள்ள ஜாம்போய் என்ற கிராமத்தின் அபா பகுதியில் உள்ள ஒரு பெரிய தங்கச்சுரங்கத்தில் நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

பல அடி ஆழத்தில் சிக்கினர்

அப்போது, திடீரென சுரங்கத்தின் மேல் பகுதி பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுந்தது. சுரங்கத்தின் உள்ளே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் மண்ணுக்குள் உயிருடன் புதைந்தனர். விபத்து நடந்த உடனே அங்குச் சென்ற மீட்புக்குழுவினர் உள்ளூர் மக்களின் உதவியுடன் மண்ணைத் தோண்டி உடல்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கினர்.

முதற்கட்டமாக 30 பேர் மட்டுமே பலியானதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், இடிபாடுகள் அதிகமாக இருந்ததால் பல அடி ஆழத்தில் சிக்கியவர்களை மீட்பதில் பெரும் சிக்கல் நீடித்தது.

107 பேர் பலி

இந்நிலையில் மண்ணுக்குள் இருந்து மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து, இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 107-ஐ கடந்துள்ளதாக உள்ளூர் சுரங்க சங்கத்தின் மூத்த அதிகாரி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

படுகாயமடைந்த தொழிலாளர்களுக்குத் தங்கள் நாட்டு மருத்துவமனைகளில் அவசரச் சிகிச்சை அளிக்கத் தயாராக இருப்பதாக பக்கத்து நாடான கேமரூன் அரசு அறிவித்துள்ளது.

விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தச் சுரங்கத்தை சட்டவிரோதமாக நடத்தியது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.