;
Athirady Tamil News

அமெரிக்காவில் விமானம் – காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!

0

அமெரிக்காவில் சிறிய ரக விமானமும் காவல்துறையின் ஹெலிகாப்டரும் மோதி புதன்கிழமை மாலை விபத்துக்குள்ளானது.

பென்சில்வேனியா மாகாணம், கம்பர்லேண்ட் கவுண்டியில் உள்ள கார்லைல் விமான நிலையம் அருகே செஸ்னா 150 சிறிய ரக விமானமும், பென்சில்வேனியா மாகாண காவல்துறையின் பெல் 407 ஹெலிகாப்டரும் புதன்கிழமை இரவு 7:50 மணியளவில் (அமெரிக்க நேரப்படி) மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில், செஸ்னா 150 விமானத்தை இயக்கிய விமானி பலியானதாக அமெரிக்க காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த விமானத்தில் உயிரிழந்த விமானியைத் தவிர யாரும் பயணிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஹெலிகாப்டரில் பயணித்த பென்சில்வேனியா மாகாண காவல்துறையின் விமானப் பிரிவைச் சேர்ந்த இருவர் காயமடைந்திருப்பதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்தது எப்படி?

புதன்கிழமை இரவு 7 மணியளவில் பென்சில்வேனியா மாகாண காவல்துறையின் பெல் 407 ஹெலிகாப்டரில் வழக்கமான பயிற்சியில் விமானிகள் ஈடுபட்டிருந்தனர்.

அந்த சமயத்தில் கார்லைல் விமான நிலையத்திலிருந்து செஸ்னா ஜெட் விமானம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், அந்த விமானம் வழக்கத்துக்கு மாறாக வலதுபுறம் திரும்பி, ஹெலிகாப்டரின் பின்புறத்தில் மோதியதால் விபத்து நேரிட்டதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஜெட் விமானம் பல துண்டுகளாக நொறுங்கி புல்வெளியில் விழுந்தது. இதில், விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து அமெரிக்க விமான விபத்து விசாரணைப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.