சீனாவில் தங்கக் கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி!
சீனாவில் 5 வயது சிறுமி 50 கிராம் தங்கக் கட்டியை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு சீனாவில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி தங்கக் கட்டியை விழுங்கியுள்ளார். உடனே அந்தச் சிறுமி பெய்ஜிங் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
4 செ.மீ நீளமுள்ள அந்தச் சிறிய தங்கக் கட்டி, சிறுமியின் வயிற்றில் சிக்கியிருப்பதை எக்ஸ்-ரே படம் உறுதிப்படுத்தியது.
பின்னர் எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் அந்த 4 செ.மீ நீளப் பட்டையை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். சிறுமி தற்போது குணமடைந்துள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து இணையதளவாசிகள் பலர் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
அதில் ஒரு பயனர், குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள், சிறிய பொருட்களை எப்போதும் குழந்தைகளிடமிருந்து தள்ளி வைத்திருப்பது நல்லது என்று தெரிவித்துள்ளார்.