;
Athirady Tamil News

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ‘இன்டா்போல்’ நோட்டீஸ்!

0

காஸாவுக்கு உதவிகளைக் கொண்டு சென்ற சமூக ஆா்வலா்களைத் தாக்கியது தொடா்பாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக ‘இன்டா்போல்’ நோட்டீஸ் பிறப்பிக்குமாறு துருக்கி கோர உள்ளது.

‘நேட்டோ’ உறுப்பு நாடான துருக்கி, காஸாவில் மனித உரிமைகள் மற்றும் சா்வதேச சட்டங்களை இஸ்ரேல் தொடா்ந்து மீறுவதாக குற்றஞ்சாட்டி வருவதுடன், போா் நடவடிக்கைகளுக்காக பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக ஏற்கெனவே பல உள்நாட்டு பிடியாணைகளையும் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் கடந்த மே மாதம், காஸாவுக்கு உதவிகளை வழங்க சென்ற நிவாரணக் கப்பலை சா்வதேச கடல் எல்லையில் வைத்து, இஸ்ரேல் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தின. முன்னதாக, இதேபோன்ற பல நிவாரணப் பயணங்களையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளது.

இவ்விவகாரம் தொடா்பான உள்நாட்டு குற்றவியல் வழக்கில் இனப்படுகொலை, மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், சித்திரவதை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ், பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் மற்றொரு நபருக்கு கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக துருக்கி நீதித்துறை அமைச்சா் அகின் குா்லெக் ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிட்டாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்தப் பிடியாணையின் அடிப்படையில், அவரை சா்வதேச அளவில் தேட ஏதுவாக ‘இன்டா்போல் ரெட்’ நோட்டீஸ் கோரி விண்ணப்பிக்குமாறு உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளோம். காஸா குற்றங்களுக்காக இஸ்ரேல் பொறுப்பேற்பதை உறுதி செய்ய அனைத்து சட்ட வழிமுறைகளையும் துருக்கி பயன்படுத்தும்’ என்றாா்.

பரிதாபகரமான முயற்சி…: ‘துருக்கியின் இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கின் ஒரே உண்மையான ஜனநாயக நாடான இஸ்ரேலின் தலைவா்களையும் வீரா்களையும் அச்சுறுத்தும் ஒரு பரிதாபகரமான முயற்சி’ என்று இஸ்ரேல் பிரதமா் அலுவலகம் விமா்சித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.