நேபாள பெருவெள்ளத்தில் சொந்த கிராமம் என்னவானது? உறவுகளைத் தேடும் குடும்பம்!
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, தனது சொந்த கிராமமும், அங்குள்ள உறவினர்களின் நிலையை அறிய ஒரு வயது குழந்தையுடன் வெள்ளம் பாதித்த திரிசூலி பகுதிக்கு வந்துள்ளனர் காத்மாண்டுவைச் சேர்ந்த ஒரு குடும்பம்.
இதுதொடர்பாக சபினா சுனார் கூறுகையில்,
தாடிங் பகுதியில் சுமார் 26 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தங்களது கிராமம். நேபாளத்தின் பெருவெள்ளம் தொடர்பாக தொலைக்காட்சியிலும், மொபைல் போன்களிலும் தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில, கனத்த இதயத்துடன் தனது சொந்த கிராமமும், அங்குள்ள உறவினர்களின் நிலையையும் அறிய ஆவல் ஏற்பட்டது.
இன்று எங்களுக்கு விடுமுறை. எனவே, காத்மாண்டுவிலிருந்து தானும், தனது ஒரு வயதுக் குழந்தை, மற்றொரு மகன், கணவருடன் தனது சொந்த கிராமமான தாடிங் பகுதிக்கு வந்ததாக அவர் கூறினார்.
திரிசூலிக்கு சிறிது தொலைவில் அமைந்துள்ளது தனது கிராமம், சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதால் அங்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது வருத்தமளிக்கிறது.
இங்கு நிலைமை எப்படி இருக்கிறது, என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வந்தோம். மின்சாரம் இல்லாததால் போன்களை சார்ஜ் செய்ய முடியாமலும், உறவினர்களிடம் பேச இயலாத சூழலில் இங்குள்ள மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால், கிராமத்தில் உள்ள தனது உறவினர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நேபாள காவல்துறையின் தகவலின்படி, திரிசூலி பகுதியில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 616-ஆக உயர்ந்துள்ளது. திரிசூலி ஆற்றின் அருகே சுமார் 500 மீட்டர் சாலை சேதமடைந்துள்ளது. வானிலை காரணமாக அங்குப் பழுதுபார்க்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கனமழை தீவிரமடைந்து ஆற்று நீர்மட்டம் உயர்ந்ததாலும், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தின் திரிசூலி பகுதியில் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தக் குடும்பத்தினர் இந்தப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மோசமடைந்து வரும் வானிலை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் மட்டம் உயரும் ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றி வருகின்றனர்.
காத்மாண்டு-முக்லிங் சாலை செயல்பாட்டில் உள்ளதாக நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், தாடிங்கில் உள்ள பைரேனி பஜார் பகுதியில் ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள சாலையில் ஒரு வழிப் போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.