;
Athirady Tamil News

நேபாள வெள்ளப்பெருக்கு பலி 903 ஆக உயர்வு; ஆற்றில் மீண்டும் நீர்மட்டம் உயர்வதால் மக்கள் அதிர்ச்சி

0

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 320 வெளிநாட்டினர் உள்பட 2,502 பேரை காணவில்லை என்பதால் அங்கு சோகமும் பதற்றமும் நிலவி வருகிறது. திபெத் எல்லையையொட்டிய நேபாள பகுதியில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட பனிச்சரிவால் போடேகோஷி நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் நீர்மின் நிலையங்கள், பாலங்கள், சாலைகள், வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 8 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் மாயமாகி உள்ளனர்.

அடையாளம் காண முடியாத நிலை
வெள்ளத்தில் சிக்கிய 275 இந்தியர்கள் மற்றும் 128 இந்திய வம்சாவளியினரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், 108 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. திபெத்தில் 49 இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் மாயமாகி உள்ளனர்.சிதாவன் மாவட்டத்தில் அதிகபட்சமாக 264 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பெரும்பாலான உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதால் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 17 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. 96 உடல்கள் அதிகாரிகளால் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. சுமார் 20 ஆயிரம் பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 8,730 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்தியா 68.5 டன் நிவாரண பொருட்களை நேபாளத்துக்கு அனுப்பியுள்ளது.

நீர்மட்டம் திடீர் உயர்வு
பேரிடர் நிகழ்ந்த போடேகோஷி ஆற்றில் மேலும் ஒரு ஏரி உருவாகி இருப்பதும், அது எந்த நேரத்திலும் உடைந்து மேலும் ஒரு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. எனினும் இந்த ஏரியின் அளவு சுருங்கி, நீர்மட்டம் சரிந்திருப்பதால் அச்சு றுத்தல் தணிந்ததாக சீனா தரப்பில் நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது.அதேநேரம் போடேகோஷி ஆற்றில் நேற்று மீண்டும் திடீரென நீர்மட்டம் உயர்ந்தது. எனவே மீட்புப்படையினர் உள்பட அனைத்து தரப்பினரும் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். இது அந்த பகுதியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேபாளத்தில் பேரிடர் பாதித்த ரசுவா, நுவாகோட் மாவட்டங்களில் 9 நீர் மின் நிலையங்கள் இயங்கி வந்தன. இந்த பேரிடரில் அவை அனைத்தும் பெருத்த சேதமடைந்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.