வேலை இழந்தால் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டுமா?- டிரம்ப் அரசின் அதிரடி நடவடிக்கை!
வாஷிங்டன்: அமெரிக்காவின் எச்-1பி விசா மற்றும் பிற தற்காலிக விசாக்களை பெற்று பணிபுரிந்து வருபவர்கள் வேலை இழந்தால் இனி உடனடியாக அங்கிருந்து வெளியேறும் வகையில் அதிபர் டிரம்ப் அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. வேலை இழந்த பிறகு ஊழியர்களுக்கு வழங்கப்படும் 60 நாள் அவகாசத்தை ரத்து செய்ய அமெரிக்கா புதிய விதியை முன்மொழிந்துள்ளது. இந்த நடவடிக்கையால், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களால் எச்-1பி விசா மூலம் பணியமர்த்தப்பட்ட இந்தியத் தொழில்நுட்ப பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
வெளிநாட்டினர் வேலையை இழந்த பிறகு எச்-1பி விசா மற்றும் தற்காலிக வேலைவாய்ப்பு சார்ந்த பிற விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் தொடர்ந்து தங்கி புதிய வேலை தேடவோ அல்லது தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டு வந்த 60 நாள் வரையிலான அவகாசத்தை ரத்து செய்வதற்கான புதிய முன்மொழிவுகளை டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ளது. இந்த நடவடிக்கையால், புதிய வேலையைத் தேடுவதற்கோ அல்லது வேறு குடியேற்ற வழிமுறையைத் தேர்ந்தெடுப்பதற்கான கால அவகாசம் வெகுவாகக் குறைக்கக்கூடும்.
இது தொடர்பான புதிய விதிமுறைகளின் வரைவு அறிக்கை வெள்ளிக்கிழமை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் ‘பெடரல் பதிவேட்டில்’ வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த புதிய முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி, E-1, E-2, E-3,H-1B1,L-1,O-1 மற்றும் TN ஆகிய தற்காலிக விசா வகைகள் மற்றும் அவற்றின் கீழ் வரும் விசாவில் வந்திருப்பவர்கள் வேலை இழந்தால், அவர்களும் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். வேலைவாய்ப்பு சார்ந்த இந்த விசா வகைகளுக்கு, தற்போதைய அவகாச முறையானது “வெளிநாட்டவரின் சட்டப்பூர்வ அந்தஸ்தை, அதற்கான தகுதியின் அடிப்படையிலிருந்தே நீக்கப்படுவதாக கூறியுள்ளது.
மேலும், அடுத்த 60 நாள்களுக்குள் இது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், விசா காலாவதியாகும் முன்பே வேலையை இழக்கும் வெளிநாட்டினர், அமெரிக்காவில் தங்குவதற்கான தனிப்பட்ட அனுமதி ஏதும் இல்லாவிட்டால், உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்; பின்னர் மற்றொரு அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து பணி வாய்ப்பைப் பெற்ற பிறகு, அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். மேலும், விசாவுக்குப் பொறுப்பேற்ற நிறுவனத்துடனான வேலைவாய்ப்பு முடிந்தவுடன் ஊழியர்களை வெளியேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அவகாசக் காலம் என்பது அதிகார வரம்பிற்கு உள்பட்டது என்பதால், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் அதைக் குறைக்கவோ அல்லது முழுமையாக நீக்கவோ முடியும்.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களைப் பணியமர்த்துவதற்கு எச்-1பி விசாவையே பெரிதும் நம்பியுள்ளன.
அமெரிக்கச் சட்டத்தின்படி ஆண்டுதோறும் 65,000 எச்-1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன; மேலும் 20,000 விசாக்கள் அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் உயர்கல்விப் பட்டங்களைப் பெற்றவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
ஜனவரி 2025-இல் அமெரிக்க அதிபராக மீண்டும் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, சட்டப்பூர்வ குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக எடுத்துள்ள சமீபத்திய நடவடிக்கை இதுவாகும்.