;
Athirady Tamil News

உக்ரைன் மீதான போருக்கு மத்தியில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 3 ரஷிய வீரர்கள் சென்றனர்…!!

0

சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்காவின் நாசா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பிய, கனடா ஆகியவை இணைந்து அமைத்து உள்ளன. இங்கு சுழற்சி முறையில் விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

ஒருமுறை செல்லும் விண்வெளி வீரர்கள் சுமார் 6 மாதங்கள் வரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து பணியாற்றுவார்கள். அதன்பின் பூமிக்கு திரும்புவார்கள்.

இந்த நிலையில் ரஷியாவை சேர்ந்த 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை நேற்று சென்றடைந்தனர். உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளது. இவ்விவகாரத்தில் ரஷியா- அமெரிக்கா இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் 3 ரஷிய விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளனர்.

ரஷியாவின் டேனிஸ் மெத்வேவெவ், செர்ஜி கோர்சாகோவ், ஒலெக் ஆர்டெமிகேவ் ஆகிய விண்வெளி வீரர்கள் சோயுஸ் எம்.எஸ்.21 ராக்கெட்டில் புறப்பட்டனர். கஜகஸ்தானில் உள்ள பைசோனூர் ஏவு தளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றடைந்த ரஷிய வீரர்கள் உக்ரைன் நாட்டு தேசிய கொடி நிறமான மஞ்சள் மற்றும் நீலநிறத்தில் ஆடை அணிந்து இருந்தனர்.

இது குறித்து ஆர்ட்டெ மிகேவ் கூறும்போது, ‘ஒவ்வொரு குழுவினரும் தங்களது சொந்த விருப்பத்தை தேர்வு செய்கிறார்கள். ஒரு வண்ணத்தை தேர்ந்தெடுப்பது எங்கள் முறை. நாங்கள் நிறைய மஞ்சள் பொருட்களை குவித்து இருக்கிறோம். அதனால்தான் மஞ்சள் நிறம் அணிய வேண்டியதாயிற்று’ என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.