;
Athirady Tamil News

வடக்கில் அதிகரிக்கும் கோவிட் தொற்று: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

0

மன்னார் மாவட்டத்தில் கடந்த 11 தினங்களில் மொத்தம் 103 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று(12) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,”மன்னார் மாவட்டத்தில் கடந்த 11 தினங்களாக கோவிட் தொற்று மிகவும் அதிகமாக காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் மொத்தம் 967 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இந்த மாதத்தின் முதல் 11 நாட்களில் மொத்தம் 103 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தில் மொத்தமாக 6 நபர்கள் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதுடன் மாவட்டத்தில் இதுவரை 40 நபர்கள் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள கோவிட் தொற்றானது சாதாரண தடிமன்,தலையிடி,தலைபாரம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படுகின்றது.

இவர்களில் அதிகமானவர்கள் வீடுகளில் தங்கி இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். அதற்கு அமைவாக எம்மால் அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை உண்மையான எண்ணிக்கையை விட மிகக் குறைவாக இருக்கும்.

103 நோயளர்கள் எம்மால் கண்டறியப்பட்டால் இதை விட 7 அல்லது 8 மடங்கு நோயாளர்கள் சிகிச்சைக்கு வைத்தியசாலைக்கு வருகை தராமல் சுய சிகிச்சை பெற்றுக்கொண்டு வீடுகளில் தங்கி இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.

இந்த தொற்றானது சாதாரண நிலையில் காணப்பட்டாலும் கூட ஒரு சமூகத்தில் மிகவும்,குறுகிய காலத்தில் பரவும் போது திரிவடையக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.

இவ்வாறு திரிவடைந்தால் வீரியம் கூடிய வைரஸ் ஒன்று இந்த சமூகத்தில் உருவாகி பரவினால் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் சந்தர்ப்பம் உள்ளது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக பொதுமக்களை வீட்டில் தங்கி இருக்கவோ அல்லது பிரதேசங்களை முடக்கவோ முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே பொது மக்கள் இவ்வாறான சூழ்நிலையில் கட்டாயம் முக கவசங்களை அணிந்துக்கொள்ள வேண்டும். கூடிய அளவில் மக்கள் நடமாட்டம் அதிகரித்த இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

மாவட்டத்தில் இதுவரை 20 வயதிற்கு மேற்பட்ட 64 சதவீதமானவர்கள் முதலாவது மேலதிக வலுவூட்டல் தடுப்பூசி,அல்லது 3 வது பைசர் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

இதேவேளை அனைவரும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டால் மட்டுமே இந்த தொற்று சங்கிலியை உடைக்க முடியும்.

எனவே மூன்றாவது அல்லது மேலதிக வலு தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் உடனடியாக உங்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் அல்லது பொது சுகாதார பரிசோதகர்களை தொடர்பு கொண்டு தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்,நோய்வாய்ப்பட்டவர்கள்,மற்றும் 20 வயதிற்கு மேற்பட்ட விரும்பியவர்கள் தமது நான்காவது தடுப்பூசியை அல்லது 2 ஆவது மேலதிக வலுவூட்டல் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.

இவர்கள் சுகாதார வைத்திய அதிகாரிகளை நாடி நமது உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மன்னார் மாவட்டத்தின் நிலவரம்
இலங்கையில் மன்னார் மாவட்டத்திலேயே மிக குறைந்த அளவான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,குறைந்த அளவான கோவிட் மரணங்களும் இடம் பெற்றுள்ளன.

இது சுகாதார திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்களங்களின் துரித நடவடிக்கை காரணமாகவும்,கடந்த காலங்களில் பொது மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு காரணமாகவும் சாத்தியமாகியது.

இவ்வாறான ஒரு ஒத்துழைப்பை தற்போதைய கடினமான கால கட்டத்திலும் எதிர்பார்த்துள்ளோம்.மக்கள் கட்டாயம் சுகாதார வழி முறைகளை கையாளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதேவேளை கடந்த வருடத்தின் இறுதியில் தொடங்கிய டெங்கு நோயின் தாக்கம் இந்த வருட ஆரம்பத்திலும் காணப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் தற்போது வரை 177 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் அதிகமானவர்கள் மன்னார் தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

தற்போது டெங்கு நுளம்பின் தாக்கம் குறைவடைந்திருந்தாலும்,மழை காலம் ஆரம்பிக்கும் போது டெங்கு நுளம்பின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க சந்தர்ப்பம் உள்ளது. எனவே பொது மக்கள் தமது சுற்றாடலை கட்டாயம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மடு திருத்தலத்தில் தற்போது திருவிழா இடம்பெற்று வருகின்றது.எதிர்வரும் 15ம் திகதி இறுதி திருவிழா திருப்பலி இடம்பெறவுள்ளது.

அதிக அளவிலான பொதுமக்கள் மன்னாரில் இருந்தும், நாட்டின் ஏனைய இடங்களில் இருந்தும் மடு திருத்தலத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த மக்களும் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.