;
Athirady Tamil News

வங்கி வைப்புக்களுக்கான வட்டி குறைவடையுமா?

0

ரொபட் அன்டனி

மத்திய வங்கி நாட்டின் வங்கி கட்டமைப்பு பயன்படுத்தும் கொள்கை வட்டி வீதங்களை குறைத்துள்ளது. அண்மையில் கூடிய மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 0.25 வீதத்தினால் வட்டி விகிதத்தைக் குறைப்பதற்குத் தீர்மானித்திருக்கிறது. அதாவது, இதுவரை காலமும் 8ஆகக் காணப்பட்ட ஓர் இரவு கொள்கை வட்டியானது தற்போது 7.75 வீதமாககக் குறைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தின் விரிவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தக் கொள்கை வட்டி வீதக் குறைப்பு முக்கியமானதாக அமைந்திருக்கிறது. பணவீக்கம் குறைவடைந்து செல்லும் நிலையில் இந்தத் தீர்மானத்தை மத்திய வங்கியின் நாணயச் சபை எடுத்துள்ளது. இருப்பினும், இந்த வட்டி வீதக் குறைப்பினால் இனிவரும் காலங்களில் மக்கள் வங்கிகளில் மேற்கொள்ளும் நிலையான வைப்புகளுக்கான வட்டி வருமானம் குறையும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

“ஏற்கனவே செய்யப்பட்ட வங்கி வைப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி குறைவு ஏற்படாது. ஆனால், புதிதாக செய்யப்படும் வங்கி நிலையான வைப்புகளுக்கு மக்களுக்கு கிடைக்கும் வட்டி குறையும். காரணம், மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது. இது வங்கியில் நிலையான வைப்புகளைச் செய்து, அதில் வருமானத்தைப் பெறும் மக்களுக்கு நல்ல செய்தி இல்லைதான். ஆனால், பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில், இது ஒரு சிறந்த செய்தியாகக் காணப்படுகிறது. இருப்பினும், வங்கி வைப்புகளுக்கான வட்டி விகிதம் குறையும்” எனக் குறிப்பிடுகிறார் பொருளாதார நிபுணர் ஜயந்த கோவில கொடகே.

பொருளாதாரத்துக்கு என்ன நடக்கும்?

மத்திய வங்கி வட்டி வீதங்களைக் குறைத்திருப்பதானது, பொருளாதாரத்தில் ஒரு பெரிய சாதகமான தாக்கத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய வங்கியானது வங்கிகளுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வங்கிகள் மக்களுக்கு வழங்கும் கடன்கள், மக்களிடமிருந்து பெறும் வைப்புகள் போன்றவற்றுக்கான வட்டி விகிதங்களை அடிப்படையாகத் தீர்மானிக்கிறது. மத்திய வங்கி தீர்மானிக்கும் இந்த வட்டி வீதத்தின் அடிப்படையிலேயே வங்கிகள் தாம் வழங்கும் கடன்களுக்கு வட்டியை அறவிடுவதுடன் மக்களிடமிருந்து பெறும் வைப்புகளுக்கும் வட்டிகளை வழங்கும். எனவே, மத்திய வங்கி தீர்மானிக்கும் வட்டி விகிதம் மிக முக்கியத்துவம் மிக்கது.

பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்றால், மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும். பணவீக்கம் பெரிய அளவில் குறைவடைந்து சென்றால், மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும். உதாரணமாக, 2022 ஆம் ஆண்டு நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால், பணவீக்கம் 70 வீதத்தை கடந்தது; உணவுப் பணவீக்கம் 90 வீதத்தை கடந்தது.

இந்த பின்னணியில் 2022இல் அரசாங்கம் வட்டி வீதங்களை அதிகரித்தது. இதன்மூலம் மக்களின் வைப்புகளுக்கு 30 வீதத்துக்கும் அதிகமான வட்டி வருமானம் கிடைக்கப்பெற்றது. அதேபோன்று, மக்கள் பெறும் கடன்களுக்கும் அதிகளவு வட்டி அறவிடப்பட்டது. இதனால், மக்கள் அதிகளவு பணத்தை வங்கியில் வைப்புச் செய்தார்கள். புதிய கடன்களைப் பெறவில்லை. இதன் மூலம் பொருட்களுக்கான கேள்விகள், சேவைகளுக்கான கேள்விகள் குறைவடைந்து, பணவீக்கம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. இக்காலத்தில் மக்கள் தமது நகைகளை, சொத்துக்களை அடகு வைத்துவிட்டு, அந்தப் பணத்தைக் கொண்டு வங்கியில் வைப்புச் செய்தார்கள். காரணம், அதிக அளவு வட்டி கிடைத்தது. அதேபோன்று, வங்கிகள் திறைசேரிக்கு வழங்கும் கடன்களுக்கும் அதிகளவு வட்டி வழங்கப்பட்டது. இதன் மூலம் சந்தையில் இருந்த மக்களின் பணமானது வங்கி கட்டமைப்பு மற்றும் திறைசேரியை நோக்கி நகர்ந்தது. இதன் மூலமே பொருட்களுக்கான கேள்விகள் குறைவடைந்து, பணவீக்கம் தற்போது நன்றாக குறைந்துள்ளது.

சந்தையில் மக்களிடம் இருக்கும் பணம் வங்கி கட்டமைப்பை நோக்கி நகரும். வங்கி கட்டமைப்பை நோக்கி நகரும்போது, பொருட்களுக்கான, சேவைகளுக்கான கேள்விகள் குறைவடைந்து, அவற்றின் விலைகளும் கட்டணங்களும் வீழ்ச்சியடையும். அப்போது நாட்டில் பணவீக்கம் குறைவடையும். எனவே, அதிகரித்திருக்கும் பணவீக்கத்தைக் குறைப்பதற்கான ஒரு கருவியாக மத்திய வங்கி இந்த வட்டி விகிதத்தைப் பயன்படுத்துகிறது.

2022ஆம் ஆண்டு இதுதான் நடந்தது. பணவீக்கம் அதிகரித்தபோது, மத்திய வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்தது. இதைத் தொடர்ந்து பணவீக்கம் குறைவடைந்தது. அதாவது, மத்திய வங்கி பயன்படுத்திய அந்தக் பொருளாதாரக் கருவி சிறந்த விளைவை பெற்றுக் கொடுத்தது. வட்டி வீதம் அதிகரித்தமையினால், பணவீக்கம் குறைவடைந்து பொருளாதார விலை ஸ்திரத்தன்மை நாட்டில் ஏற்பட்டது.

சிறிய வர்த்தகங்கள் பாதிப்பு

வட்டி வீதங்கள் அதிகரிக்கும்போது அல்லது குறையும்போது சந்தைக்கு ஏற்படும் மற்றுமொரு பொருளாதார தாக்கம் இருக்கின்றது. அதாவது, வட்டி விகிதங்களை அதிகரிக்கும்போது சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களினால் கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியாத சூழல் ஏற்படும். ஏற்கனவே பெற்றுக்கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். அப்போது அவர்கள் தமது வர்த்தகச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது தவிப்பார்கள். 2022 ஆம் ஆண்டு நிலைமை நாட்டில் ஏற்பட்டது. பணவீக்கம் அதிகரித்ததன் காரணமாக 2022 ஆம் ஆண்டு மத்திய வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்தது. இதனால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களுக்கு கடன்களைப் பெற்றுக் கொள்ள முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது. பெற்றுக்கொண்ட கடன்களுக்கான வட்டி வீதமும் அதிகரித்தது. இதனால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள் தமது வர்த்தகங்களை முன்னெடுத்துச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இந்தச் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் காணப்படுகிறார்கள். எனவே, இந்த வட்டி வீதம் அதிகரிக்கும்போது நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.

மறுபுறம் வட்டி வீதம் குறையும்போது மக்கள் அதிக அளவில் கடன்களைப் பெற்று வர்த்தகங்களைச் செய்வார்கள். பொதுமக்கள் கடன்களைப் பெற்று வீடுகளைக் கட்டுவார்கள்; வாகனங்களைக் கொள்வனவு செய்வார்கள்; வெளிநாடுகளுக்குப் பயணிப்பார்கள். இதன் மூலம் நாட்டின் பொருளாதார சந்தர்ப்பங்கள் அதிகரித்து, பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அதேபோன்று, வர்த்தகர்களும் கடன்களைப் பெற்று புதிய வர்த்தக முயற்சிகளை மேற்கொள்வதால் அங்கும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். எனவே, மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைப்பதுதான் நாட்டின் பொருளாதாரத்திற்குச் சிறந்ததாக அமையும்.

தற்போதைய தேவை

தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை அதிகரிக்க வேண்டிய ஒரு தேவை காணப்படுகிறது என்று சர்வதேச நிறுவனங்களால் எதிர் கூறப்பட்டுள்ளது. எனவே, பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டுமானால், வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும். மக்கள் அதிகளவு கடன்களைப் பெற வேண்டும். சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சிகள் அதிகளவு கடன்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதன்மூலம் மக்கள் கடன்களைப் பெற்று பொருளாதார வர்த்தகச் செயற்பாடுகளை மேற்கொள்வார்கள். புதிய முதலீடுகளை, புதிய கொள்வனவுகளைச் செய்வார்கள். வர்த்தகங்களை ஆரம்பிப்பார்கள். எனவே, பொருளாதார கொடுக்கல் வாங்கல்கள் அதிகரிக்கும். மக்களின் பொருளாதார சந்தர்ப்பங்கள் உருவாகும்; பொருளாதாரம் வளர்ச்சியடையும்; பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். எனவே, பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பதற்கு மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைப்பது மிக முக்கியமானது.

அதுமட்டுமின்றி, நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், வறுமையைக் குறைக்கவும் இந்த வட்டி வீதம் ஒரு கருவியாகப் பயன்படுகிறது. வட்டி விகிதம் குறையும் பட்சத்தில், நாட்டில் மக்கள் கடன்களைப் பெற்று பொருளாதாரச் செயற்பாடுகளை அதிகரிக்கும்போது, மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மக்களின் வருமானம் அதிகரிக்கும். அப்போது மக்களுக்கு வறுமை குறைவடையும். நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். தற்போது நாட்டில் வறுமை அதிகரித்திருக்கிறது. 25 வீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாக உலக வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 60 இலட்சம் பேர் வறுமைக் கோட்டின் கீழ் இருப்பதாக உலக வங்கியின் புள்ளிவிவர அறிக்கைகள் கூறுகின்றன. எனவே, வறுமையைக் குறைப்பதற்கு இந்த வட்டி வீதக் குறைப்பு அவசியமாக இருக்கிறது.

என்ன நடக்கும்?

இந்த வட்டி வீதக் குறைப்பானது இவ்வாறு பல வழிகளிலும் நாட்டின் பொருளாதாரத்திற்குச் சாதகமாக இருக்கிறது. ஆனால், மறுபுறம் பொருளாதார ரீதியாக மக்கள் வங்கிகளில் மேற்கொள்ளும் வைப்புகளுக்கான வட்டி வருமானம் குறையப்போகிறது. அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. “வங்கி வட்டி வருமானத்தை அதிகரிக்கவேண்டும் என்றால் அது பொருளாதார வளர்ச்சிக்குச் சாதகமாக அமையாது.

தற்போது சிரேஷ்ட பிரஜைகள் தான் இதுவரை காலம் உழைத்த பணத்தை வங்கியில் வைப்புச் செய்து, அதில் கிடைக்கும் வட்டியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவ்வாறானவர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை கண்டறிந்து மானியங்களை, நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இந்த இடத்தில் வட்டி வீதம் குறைக்கப்படும்போது, பொதுமக்களின் வங்கி வைப்புகளுக்கான (நிலையான வைப்புகளுக்கான) வட்டி வருமானம் குறைவடையும் என்பது யதார்த்தமானது. அதனைத் தவிர்க்க முடியாது. அதேபோன்று, மக்கள் பெறும் கடன்களுக்கான வட்டி வீதமும் குறையப்போகிறது. அப்போது மக்கள் அதிக அளவு கடன்களைப் பெற்று வர்த்தகங்களைச் செய்வார்கள்; பொருளாதாரத்தை விரிவுபடுத்துவார்கள். இதனால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். இதனால், நாட்டின் வளர்ச்சி ஏற்படுகிறது. எனவே, இங்கு பொதுவான பரந்த நோக்கத்தில் இதனை அணுக வேண்டியிருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.