;
Athirady Tamil News

“ஏற்கனவே திட்டமிட்ட போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்” – ‘பிபா’வுக்கு மத்திய விளையாடுத்துறை அமைச்சகம் கடிதம்..!!

0

இந்திய கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகிகள் தேர்தலை கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்காததால் அதன் தலைவராக இருந்த முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேலை பதவியில் இருந்து கடந்த மே மாதம் சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது. அத்துடன் இந்திய கால்பந்து சம்மேளனத்தை நிர்வகிக்க முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.தேவ் தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டது. மேலும் தேசிய விளையாட்டு கொள்கையின்படி இந்திய கால்பந்து சம்மேளன விதிமுறையில் மாற்றம் கொண்டு வந்து புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்தவும் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தலை வருகிற 28-ந் தேதி நடத்த நிர்வாக கமிட்டி ஏற்பாடு செய்து வந்தது. மாநில சங்க நிர்வாகிகளுடன், தலைசிறந்த முன்னாள் வீரர்கள் 36 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. முன்னாள் வீரர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கியதால் சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) கடும் அதிருப்திக்குள்ளானது

இந்த நிலையில் இந்திய கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகத்தில் 3-ம் தரப்பினரின் தேவையற்ற தலையீடு இருப்பதாகவும், மூன்றாம் தரப்பினர் செல்வாக்கு செலுத்துவது பிபா விதிமுறைகளை மீறிய தீவிர செயலாகும். இதனால் இந்திய கால்பந்து சம்மேளனம் உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறது என்று ‘பிபா’ அதிரடியாக அறிவித்தது. அதேநேரத்தில் இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகத்துக்கு உரிய முறையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அன்றாட நிர்வாக பணிகளை கவனிக்கும் முழு அதிகாரம் அவர்களுக்கு வரும் போது இந்த இடைநீக்கம் திரும்ப பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தடை காரணமாக, இந்தியாவில் அக்டோபர் 11-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த 7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து (17 வயதுக்கு உட்பட்டோர்) போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்திய அணி சர்வதேச போட்டி மற்றும் ‘பிபா’ வின் பயிற்சி உள்ளிட்ட எந்த நிகழ்விலும் பங்கேற்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது. இதனையடுத்து இந்திய கிளப் அணிகள் ஏற்கனவே திட்டமிட்ட போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதனிடையே இந்திய கால்பந்து சம்மேளனத்தை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு இடைநீக்கம் செய்வதற்கு முன்னதாக ஸ்ரீகோகுலம் கேரளா எப்சி அணி, கால்பந்து போட்டிகளில் பங்கேற்பதற்காக உஸ்பெகிஸ்தான் சென்றடைந்துள்ளது. இதையடுத்து உஸ்பெகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்திய அணிக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு விளையாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.