;
Athirady Tamil News

ஜார்கண்டில் அரசியல் நெருக்கடி- ஆளும் கட்சி எம்எல்ஏக்களை பாதுகாக்க சோரன் அரசு தீவிரம்..!!

0

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அமைத்துள்ளன. முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வரும் நிலையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை தன் பெயரில் சோரன் பெற்றதாக அம்மாநில எதிர்க்கட்சியான பா.ஜ.க. குற்றம் சாட்டியது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இது குற்றம் என்பதால், அவரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என அம்மாநில ஆளுநரிடம் பா.ஜ.க. மனு கொடுத்தது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் கருத்துக்களை ஆளுநர் ரமேஷ் பைஸ் கேட்டிருந்தார். இதையடுத்து சோரனை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வது தொடர்பான தனது பரிந்துரையை ஜார்க்கண்ட் ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சோரனின் முதலமைச்சர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தார்மீக அடிப்படையில் முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்றும், ஜார்கண்ட் மாநில சட்டசபையை கலைத்து விட்டு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தி உள்ளது. இதனிடையே, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் குதிரை பேர முயற்சியில் எதிர்க்கட்சியான பாஜக ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது. ஹவுராவில் கார் ஒன்றில் கட்டுக்கட்டாக பணத்துடன் மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிடிப்பட்ட நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜகவின் ஆபரேஷன் தாமரை’ திட்டம் அம்பலமாகி விட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்திருந்தார். மகாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்த்ததுபோல், ஜார்கண்ட் மாநிலத்திலும் சோரன் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் ஜார்க்கண்ட்டில் ஆளும் கூட்டணியை சேர்ந்த எம்எல்ஏக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை சோரன் அரசு மேற்கொண்டுள்ளது. இதையடுத்து தலைநகர் ராஞ்சியில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் லக்கேஜ்களுடன் எம்எல்ஏக்கள் குவிந்தனர். அவர்களுடன் ஹேமந்த் சோரன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் இரண்டு பேருந்துகள் மூலம் எம்எல்ஏக்கள் புறப்பட்டுச் சென்றனர். குந்தி மாவட்டத்தில் உள்ள லத்ரது அணை பகுதிக்கு அமைச்சர்கள் மற்றும் ஏஎம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சென்ற காட்சி வெளியானது. அங்குள்ள விருந்தினர் விடுதியில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

நாங்கள் வேறு இடங்களுக்கு செல்ல உள்ளதாகவும், எங்கு செல்வோம் என தெரியவில்லை என்றும் அமைச்சர் சத்யானந்த் போக்தா தெரிவித்துள்ளார். இதனிடையே, ஜார்க்கண்ட் எம்எல்ஏக்கள் சத்தீஷ்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 81 உறுப்பினர்களை கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 49 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு மட்டும் 30 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சியில் 18 எம்எல்ஏக்களும், ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கு ஒரு எம்எல்ஏவும் உள்ளனர். எதிர்க்கட்சியான பாஜகவிற்கு 26 எம்எல்ஏக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.