;
Athirady Tamil News

பாகிஸ்தானில் இந்து விவசாயி சுட்டுக்கொலை: 2 பேர் கைது

0

பாகிஸ்தானில் நில விவகாரத்தில் இந்து விவசாயி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தல்ஹர் கிராமத்தில், நிஜாமானிக்கு சொந்தமான நிலத்தில் குடிசை அமைத்ததாகக் கூறி, கைலாஷ் கோஹ்லி(23) மீது கடந்த 4ஆம் தேதி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

பின்னர் குற்றவாளி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியதால் வழக்கில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு ஹைதராபாத்தின் ஃபதே சௌக் பகுதியில் நில உரிமையாளர் சர்ஃபராஸ் நிஸாமனி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஜஃபருல்லா கான் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

தனது நிலத்தில் குடிசை அமைக்க கோஹ்லி முயன்றதை விரும்பாத நிஸாமனி அவரை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

குண்டு காயங்களால் கோஹ்லி மருத்துவமனையில் பலியானார்.

இந்த சம்பவம் தொடர்பாக கோஹ்லியின் சகோதரர் பூன் குமார் கோஹ்லி புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை சிறப்பு குழு அமைத்து போலீஸார் தேடி வந்தனர். தற்போது இச்சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக பாகிஸ்தானில் இந்து விவசாயி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதிகோரி மனித உரிமைக் குழுக்கள் போராட்டம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.