;
Athirady Tamil News

ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடி- அசோக் கெலாட் ஆதரவாளர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ்..!!

0

காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந்தேதி நடைபெறும் நிலையில் இதில் போட்டியிட ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் முடிவு செய்துள்ளார். இதனால் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வது தொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரசில் கடும் கருத்து மோதல் நிலவு வருகிறது.

ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவதற்கு கெலாட் ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு நிபந்தனைகளை விதித்ததால், காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

மேலும் கட்சி தலைமை சார்பில் கூட்டப்பட்ட ஆலோசனை கூட்டத்தையும் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் மல்லிகார்ஜூன கார்கே, அஜய் மக்கான் ஆகியோர் எழுத்துப் பூர்வ அறிக்கை தயார் செய்து கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் சாந்தி தரிவால், மகேஷ் ஜோஷி, தர்மேந்திர ரத்தோர் ஆகிய மூன்று பேரிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் மேலிடம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. குற்றச்சாட்டுகள் மற்றும் ஒழுக்கமின்மை செயல்களை அடுத்து, அரசியலமைப்பின் விதிகளின்படி உங்கள் மீது ஏன் ஒழுக்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து 10 நாட்களுக்குள் பதில் அளிக்கக் கோரி நோட்சில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைமை அனுப்பிய நோட்டீஸ் இன்னும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த கெலாட் ஆதரவாளர் மகேஷ் ஜோஷி, அது கிடைத்ததும், திருப்திகரமான பதில் வழங்கப்படும் என்றார். நாங்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியின் விசுவாசிகள். உண்மை மற்றும் நீதிக்காக போராடினோம், மேலும் போராடுவோம், கட்சியின் நலனுக்காக நாங்கள் நினைப்பதை செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.