;
Athirady Tamil News

தலிபான் அரசுடன் உறவை வலுப்படுத்தும் பாகிஸ்தான்!

0

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு அரசுகளும் தங்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தானின் இடைக்கால தலிபான் அரசுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடையில் நீண்டகாலமாக பதற்றமான சூழல்கள் நிலவி வந்தன. மேலும், தங்களது நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென பாகிஸ்தான் அரசு காலக்கெடு விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், தற்போது இருநாடுகளும் தங்களுக்கு இடையிலான மோதல்களைத் தவிர்த்து, அரசு முறை உறவுகளை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

பாகிஸ்தானின் உயர் அதிகாரத்துவம், நேற்று (மே 30) ஆப்கானிஸ்தானிலுள்ள தங்களது துணைநிலைத் தூதரை, தூதராகப் பதவி உயர்த்துவதாக அறிவித்தது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அரசும் பாகிஸ்தானுக்கான தங்களது பிரதிநிதியை பதவி உயர்த்தியது.

இதுகுறித்து, ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத் துறையின் எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டதாவது:

“ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் பிரதிநிதித்துவத்தில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றமானது, பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கு வழிவகுத்துள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி விரைவில் பாகிஸ்தான் செல்லவுள்ளதாக, அந்நாட்டு வெளியுறவுத் துறையின் செய்தித்தொடர்பாளர் ஜியா அஹ்மது தகல், தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மே மாதம் சீனாவில் நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்பட மூன்று நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சந்தித்துக்கொண்டனர்.

அப்போது, சீன அமைச்சர் வாங் யீ கூறுகையில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தங்களது தூதர்களை பரிமாறிக்கொள்ள முன்வருவதாகவும், இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த சீனா தொடர்ந்து உதவி செய்யும் எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.